பெரும் தாக்கம்
அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும், ரசிகர்களால் உற்று நோக்கப்படுகின்றது. அதை அப்படியே பின்பற்றவும் செய்கிறார்கள். உடை, உணவு முறை, பேச்சு, கருத்தியல் என்று அனைத்திலும் தங்களின் ஆதர்சன நாயகனைப் போலவே உருமாறுகின்றனர். அந்தளவுக்கு விளையாட்டு வீரர்களால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்றால், அவர்களது செயல்பாடுகள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.
கண்காணிக்கப்படும் ஹீரோக்கள்
சிறிது பிசகினாலும், பெயர் கெட்டுப்போவது மட்டுமின்றி, அவர்களை பின்தொடரும் ஆயிரக்கணக்கான.. ஏன் லட்சக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றப்படுவார்கள். அதற்கு வீரர்கள் நேரடி காரணம் இல்லையென்றாலும், அந்த ஏமாற்றத்திற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவில் சச்சின், தோனி, கோலி, ரோஹித், பாண்ட்யா என்று நிறைய ஹீரோக்களின் செயல்பாடுகள் இங்கு கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஓலே ராபின்சன்
இது இந்தியாவில் மட்டுமல்ல.. எந்த நாடாக இருந்தாலும்.. எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சமூக பொறுப்புகள் அவர்களை திறம்பட ஏற்று நடக்கவே வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இங்கிலாந்து வீரரின் செயல்பாடு ஒன்று, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு முறையையே மாற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஆம்.. கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த இரு நாட்களாக உச்சரிக்கும் பெயர் ஓலே ராபின்சன்.
கேம்ஸ் விளையாடும் பெண்கள்
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், அறிமுகம் செய்யயப்பட்டவர் ஓலே ராபின்சன். முதல் இன்னிங்சிலேயே 4 விக்கெட்டுகள். பவுலிங்கில் அத்தனை தெளிவு. நேர்த்தி. ஆனால், அவரது கடந்த கால செயல்பாடுகள் இப்போது அத்தனைக்கும் எமனாக அமையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அவர் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பாக, அவரது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல், இனவெறி குறித்தும் அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
மன்னிப்பு கேட்கிறேன்
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து அவர், எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை. நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
மறுபரிசீலனை
ஆனால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று Daily Telegraph-ல் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்களின் தேர்வு முறையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி புதிதாக இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் கடந்த கால சமூக தள பயன்பாடுகள் குறித்து தீர ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. அதில், ஏதாவது சில சர்ச்சையான டிவீட்கள் கண்டறியப்பட்டால், வீரர்களின் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்யயப்படும் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசப்பான அனுபவம்
இதுகுறித்து இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், "இது எங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவம். இனியொரு தடவை இதே போன்றதொரு தவறு நடக்காமல் இருக்க, எதிர்காலத்தில் வீரர்களின் சோஷியல் மீடியா பக்கங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என்று கூறியிருக்கிறார்.