போட்டியில் என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் நான்கு வீரர்கள் அரைசதம் அடிக்க அந்த அணி 311 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 207 ரன்கள் மட்டுமே எடுத்து, 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அசத்தல் கேட்ச்கள்
இங்கிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்தது பென் ஸ்டோக்ஸ். அவர் 79 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார். துவக்கத்தில் நிதானம் காட்டிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்த பின்னர் விரைவாக ரன் குவித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாது, பந்துவீச்சில் 2 விக்கெட், பீல்டிங்கில் இரண்டு கேட்ச்கள் பிடித்து அசத்தினார். மேலும், ஒரு ரன் அவுட்டிலும் இவரது பங்கு உள்ளது.
அசாத்தியமான கேட்ச்
ஸ்டோக்ஸ் பிடித்த இரண்டு கேட்ச்களில் ஒன்று கிரிக்கெட் உலகின் மிக அற்புதமான கேட்ச் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ரஷித் வீசிய சுழல் பந்தில், தென்னாப்பிரிக்க வீரர் அன்டைல் பெஹ்ளுக்வாயோ கொடுத்த கேட்ச்சை, ஒருபுறமாக தாவி, ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இது மிகவும் அசாத்தியமான கேட்ச் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சு
இப்படி பென் ஸ்டோக்ஸ் பல வகைகளிலும் இங்கிலாந்து அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார் என்றால், ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் தூணாக விளங்கினார். தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரை அப்படியே "தூக்கி அடித்தார்".
மூன்று விக்கெட்கள்
எய்டன் மார்கிரம், பாப் டு ப்ளேசிஸ், டஸ்ஸன் என மூன்று பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்து தென்னாப்பிரிக்கா தடுமாற முக்கிய காரணமாக இருந்தார். மேலும், ரன் கொடுப்பதிலும் சிக்கனம் காட்டினார். ஒரு மெய்டன் ஓவர் வீசிய அவர், ஓவருக்கு சராசரியாக 3.86 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
முக்கிய காரணம்
பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஸ்டோக்ஸ் எல்லா வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார் என்றால், பந்துவீச்சில் ஒரேடியாக தென்னாப்பிரிக்கா அணியை கீழே சாய்த்தார் ஆர்ச்சர்.