தொடர்ந்து இங்கிலாந்து அதிரடி
இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதிரடி பாணியை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 51.4 ஓவர்களில் 281 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. இதில் பாகிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரர் அப்ரர் அஹ்மத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தது.
இங்கிலாந்து அசத்தல்
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து அணியின் லீச் 4 விக்கெட்டுகளையும், ரூட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 79 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தாலும், அதிரடியை கைவிடாமல் விளையாடியது.
ஹாரி ப்ரூக்ஸ் சதம்
சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக்ஸ் 9வது விக்கெட் வரை களத்தில் நின்று சதம் விளாசினார். இறுதியாக 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக்ஸின் சதத்தால், இங்கிலாந்து அணி 275 ரன்கள் சேர்த்தது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 355 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு 355 ரன்கள் இலக்கு
தொடர்ந்து சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் பாகிஸ்தான் அணி கட்டாயம் இலக்கை எட்டும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 83 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.
போராடிய சகீல் - நவாஸ் கூட்டணி
4ம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் சகீல் - அஷ்ரப் கூட்டணி தொடங்கியது. இதில் அஷ்ரப் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த நவாஸ், சகீலுக்கு உறுதுணையாக போராடினார். இந்த கூட்டணி 6 விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. பாகிஸ்தானின் வெற்றிக்கு 75 ரன்களே தேவை என்று இருந்த நிலையில், நவாஸ் 45 ரன்களிலும், சகீல் 94 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து வெற்றி
தொடர்ந்து வந்த அஹ்மத் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த, டெய்லண்டரான சல்மான் பவுண்டரிகள் விளாசி போராடினார். ஆனால் மஹ்மூத் மற்றும் முகமது அலி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அனி 328 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
22 ஆண்டுகள்
17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிடமும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.