சென்னை: வளர்த்தக் கடா மார்பில் பாய்ந்ததடா என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.
ஐபிஎல் சீசன் 11 டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் மகேந்திர சிங் டோணியின் சிஎஸ்கே அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை 4 ரன்களில் சிஎஸ்கே இழந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் டோணி, முதுகு வலியுடன் விளையாடி, 79 ரன்கள் எடுத்தார். மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற டோணியால், நேற்றைய போட்டியில் வெற்றியை எட்ட முடியவில்லை.
கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன், மற்ற வீரர்களை ஊக்குவித்து முன்னேற்றுயவர், கேப்டன் கூல் என்ற பெருமைகள் டோணிக்கு உண்டு. நேற்றைய போட்டியிலும் அதை பார்க்க முடிந்தது.
பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா சரியாக சோபிக்காதது குறித்து கூறும்போது, இன்றைய நாள் அவருடையதாக இல்லை. அவர் தன்னை நிரூபிப்பார் என்று டோணி கூறினார். மேலும் பஞ்சாப் அணி மிகச் சிறப்பாக விளையாடியதாகவும் டோணி பாராட்டினார்.
இதுவரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பை கொடுத்தவர் டோணி. நேற்றைய போட்டியின் இறுதியில், தன்னுடைய முன்னாள் கேப்டன் டோணியின் சிறப்பான ஆட்டம் குறித்து அஸ்வின் எதுவும் கூறவில்லை.
இதனால், அஸ்வின் மீது ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். சமூகதளங்களில் அஸ்வினை வறுத்து எடுத்து வருகின்றனர். வளர்த்தக் கடா மார்பில் பாய்ந்தது என்று ரசிகர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர். தல எப்பவும் தல தான். எதிரணியின் ஆட்டத்தையும் பாராட்டினார். ஆனால், அஸ்வின் அவ்வாறு செய்யவில்லை என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.