பெஷாவர்: கொரோனாவைரஸ் தாக்குதலுக்குள்ளான புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் மரணமடைந்துள்ளார். அவரது பெயர் ஜாபர் சர்பிராஸ்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த முன்னாள் வீரருக்கு வயது 50. 1969ல் பிறந்தவரான இவர் மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை ஸ்பின்னராகவும் வலம் வந்தவர். 1988 முதல் 1992 வரை போட்டிகளில் ஆடியுள்ளார்.
பெஷாவரைச் சேர்ந்த இவருக்கு 6 நாட்களுக்கு முன்பு கொரோனாவைரஸ் பாதிப்பு உண்டானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சர்பிராஸ் மரணமடைந்தார். பெஷாவர் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடியுள்ளார் சர்பிராஸ். அவரது மரணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பல கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் என கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மீண்டு வந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரை கொரோனா வீழ்த்தியுள்ளது.
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனாவைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது என்பது முக்கியமானது.