ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் இதுவரை 4,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,27,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,000 பேர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அடையாளமாக கொள்ளப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
29ம் தேதி துவங்க திட்டம்
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் 29ம் தேதி முதல் துவங்க பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் தங்களது பயிற்சி முகாம்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வரும் ஏப்ரல் 15ம் தேதிவரை விசா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளது.
நாளை நடைபெறுகிறது
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன. இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடத்தப்படுவது அல்லது ஒத்திவைக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் அணிகளுக்கு அழைப்பு
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த கூட்டத்தில் ஐபிஎல் அணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்பது குறித்து நாளைய இந்தக் கூட்டத்தில் உறுதியாக தெரியவரும்.