உலகக்கோப்பை அணி தயாரா?
உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இன்னும் 17 ஒருநாள் போட்டிகளிலேயே பங்கேற்க உள்ளது. இந்த 17 போட்டிகளில் தன் சிறந்த அணியை இந்தியா அடையாளம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது, கடந்த சில மாதங்களாக அதிகப்படியான மாற்றங்களை இந்திய அணி சந்தித்துவிட்டது. இந்த நிலையில், இந்திய அணியில் சரியான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வீரர்கள் யார்?, சிறந்த மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார்? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.
தோனிக்கு போட்டி ரிஷப் பண்ட்?
இந்த நிலையில், இந்த ஆண்டு முழுவதும் பேட்டிங்கில் தடுமாறி வரும் மூத்த வீரர் தோனி உலகக்கோப்பை அணியில் பங்கேற்பார் என பொதுவாக கூறப்பட்டாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவரது இடத்திற்கு போட்டி வந்துள்ளது.
தோனி பற்றி கங்குலி பேச்சு
தோனியின் அனுபவத்துக்கு முன் ரிஷப் பண்ட் நிற்க முடியாது என்றாலும், அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தர இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இதை பற்றி பேசிய கங்குலி, "அவர்கள் என்ன மாதிரியான அணியை உருவாக்க முயல்கிறார்கள் என புரியவில்லை. எனினும், தோனி உலகக்கோப்பையில் நன்றாக செயல்படுவார். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். ரிஷப் பண்ட் அதிரடி பேட்ஸ்மேன் என்பதற்காக தான் அணியில் சேர்த்து இருக்கிறார்கள்" என கூறினார். அதாவது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்ற தகுதியில் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை என கூறியுள்ளார் கங்குலி.
தோனியின் சராசரி குறைவு
தோனி இங்கிலாந்தில் ரன் குவிப்பதில் சரியாக செயல்படவில்லை. இதுவரை இங்கிலாந்து மண்ணில் தோனி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும், இங்கிலாந்தில் ஆடிய 20 ஒருநாள் போட்டிகளில் தோனியின் சராசரி 38.06 மட்டுமே. அவரது ஒட்டுமொத்த சராசரி 50.61 ஆகும். தோனிக்கு இந்த பின்னடைவு இருந்தாலும், கங்குலி தோனிக்கு தன் ஆதரவை அளித்துள்ளார்.