பிசிசிஐ விதிகள் மாற்றம்
பிசிசிஐ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தன் விதிகளை மாற்றி அமைத்துள்ளது. அதில் ஒரு பகுதியில், ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அமைப்பும் இலவச டிக்கெட்களுக்கு 10 சதவீதம் மட்டுமே ஒதுக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 90 சதவீதம் பொதுமக்கள் விற்பனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த 10 சதவீத டிக்கெட்டில் பாதியை பிசிசிஐ-க்கு வழங்க வேண்டும் என்ற பிரச்சனை வேறு உள்ளது.
நடைமுறையில் சாத்தியமல்ல
இந்த விதி ஆனது நடைமுறையில் சாத்தியமல்ல என அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகளும் கூறி இருக்கின்றன. மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் அமைப்பு நேரடியாக எதிர்த்தது. பிசிசிஐ மத்திய பிரதேசத்தின் இந்தோர் நகரில் நடக்கவிருந்த போட்டியை விசாகப்பட்டணத்திற்கு மாற்றியுள்ளது.
காசு கேட்க முடியாது
பிசிசிஐ-யின் இந்த விதியை பற்றி விமர்சித்துள்ள மேற்கு வங்காள மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவரான கங்குலி, "போட்டி நடத்துவதில் உறுதுணையாக இருக்கும் அரசு அலுவலகங்கள், காவல்துறை ஆகியோருக்கு இலவச டிக்கெட்கள் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவர்கள் சொல்லும் விதிப்படி 10 சதவீத இலவச டிக்கெட்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நான் அரசு அலுவலகங்கள், காவல்துறையினரிடம் போய் டிக்கெட்டுக்கு காசு கேட்க முடியாது" என கூறியுள்ளார்.
ஒண்ணும் பண்ண முடியாது
மேலும், பிசிசிஐ விதியை கங்குலி பின்பற்ற போவதில்லை என்பது தெரிந்து விட்ட நிலையில் மத்திய பிரதேசம் போல இங்கேயும் போட்டியை நடத்தாமல், இடத்தை மாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு கங்குலி போட்டியை மாற்ற முடியாது என சவால் விட்டுள்ளார். "இப்போது நாங்கள் டிக்கெட்டை அச்சிட கொடுத்து விட்டோம். இனிமேல், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. போட்டி இங்கே தான் நடக்கும்" என கெத்தாக கூறியுள்ளார் கங்குலி.