கூலித் தொழிலாளர்கள் நிலை
மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வடக்கு முதல் தெற்கு வரை பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு வீடு இல்லை.
சாப்பாட்டுக்கு சிரமம்
வேலை செய்யும் இடங்களிலேயே அவர்கள் தங்கி உள்ளனர். சிலர் மட்டுமே அறைகள், வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்களுக்கும் வேலை இல்லாவிட்டால் திண்டாட்டம் தான். சாப்பாட்டுக்கு சிரமம் ஏற்படும் நிலை ஏற்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, பின் இந்தியாவுக்கும் வந்து சேர்ந்தது. துவக்கத்தில் ஒன்று, இரண்டு தினமும் அதிகரித்து வந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்தை தொட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
இந்தியாவில் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என கணித்த மத்திய அரசு திடீரென 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், மருத்துவமனைகள் தவிர, வேறு எந்த தொழில்களும் இயங்கக் கூடாது என உத்தரவு இடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தவிப்பு
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், பல வெளி மாநில தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். வீடு இல்லாத பலரும், வேலை இல்லாததால் கையில் காசு இல்லாதவர்களும் தவித்து வருகிறார்கள்.
தவிக்கும் காட்சிகள்
அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைத்தாலும் ஊரடங்கால் எந்த போக்குவரத்து சேவையும் இயங்காததால் வீதிகளில் சுற்றி வருகிறார்கள். அவர்கள் உணவும் இன்றி, இடமும் இன்றி தவிக்கும் காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
ஹர்பஜன் சிங் விமர்சனம்
அவர்கள் நிலையை மத்திய, மாநில அரசுகள் சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் உள்ளது. அதை வலியுறுத்தி பேசி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அவர்களின் நிலை சரியாக கையாளப்படாதது தனக்கு கவலை அளிப்பதாக கூறி உள்ளார்.
சிந்தித்து இருக்க வேண்டும்
ஹர்பஜன் சிங் கூறுகையில், "ஊரடங்கு அறிவிப்பை வெளியிடும் முன் வெளிமாநில தொழிலாளர்கள் பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். அவர்கள் தங்க இடம் இல்லை, உண்ண உணவு இல்லை. சம்பாதிக்க வேலையும் இல்லை" என குறிப்பிட்டார்.
கவலை அளிக்கிறது
மேலும், "அரசு அவர்களுக்கு உத்தரவாதம் அளித்து உணவு, பணம் ஆகியவை கிடைக்க வழி செய்து இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இப்போது தங்கள் வீடுகளுக்கு திரும்ப முயன்று வருகிறார்கள். இந்த விஷயம் கையாளப்பட்ட விதம் எனக்கு கவலை அளிக்கிறது" என்றார்.
அதிக நேரம் இல்லை
எனினும், அரசுக்கும் முடிவு எடுக்க அதிக நேரம் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல காரணம், இது போன்ற நேரத்தில் அவர்கள் தங்கள் சொந்த மக்களுடன் இருக்க விரும்புகிறார்கள் எனவும் ஹர்பஜன் சிங் கூறி உள்ளார்.