நேப்பியர்: இந்திய அணியில் இதுவரை எந்தவொரு கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டது. ஆனால் இந்தியாவுக்கு தான் அது சாதகமாக முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் 75/4 ரன்களை எடுத்திருந்த போது மழை குறிக்கிட்டதால், போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் 1 - 0 என இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார். இது ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி செய்யும் 5வது டி20 ஆட்டமாகும். இந்த 5 போட்டிகளில் இதுவரை தோல்வியே வரவில்லை. அதாவது டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய கேப்டனின் முதல் 5 போட்டிகளில் தோல்வியே வராதது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களான தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களே இதுபோன்ற சாதனையை படைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா முதல் முறையாக அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளில் கேப்டன்சி செய்தார். அதில் இரண்டிலுமே வெற்றி தான். தற்போது 3 போட்டிகளில் விளையாடி தோல்வியே வரவில்லை. இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.