இந்தியாவின் வெற்றி
இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் உதவியவர் சுப்மன் கில் தான். 63 பந்துகளை சந்தித்த அவர் 126 ரன்களை விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். இதே போல பவுலிங்கில் உதவியவர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான். 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். பேட்டிங்கிலும் 17 பந்துகளில் 30 ரன்களை குவித்திருந்தார்.
புதிய கேப்டன்சி
3 போட்டிகளிலும் பாண்ட்யா மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்ததால் அவருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக தற்போது இருந்தே இந்திய இளம் படை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் அதற்கு ஏற்ற சரியான கேப்டனாக பாண்ட்யா தன்னை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு தோனி தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
பாண்ட்யாவின் விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், எனக்கு எப்போதுமே சிக்ஸர்கள் அடிக்க தான் பிடிக்கும். ஆனால் அதில் இருந்து மாறிவிட்டேன். தற்போது பார்ட்னர்ஷிப் அமைப்பதும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதும் பிடித்துள்ளது. களத்தில் நான் இருக்கும் வரையில் பதற்றமே தேவையில்லை என்ற எண்ணம் பேட்டிங் பார்ட்னருக்கும், சக அணி வீரர்களுக்கும் வரவேண்டும். எப்படி அழுத்தங்களை கையாள்வது, வீரர்களை சகஜமாக வைத்துக்கொள்வது என நான் கற்றுக்கொண்டேன்.
ஸ்ட்ரைக் ரேட் குறைவு
அணி வீரர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக தான் பவுலிங்கிலும் முதல் ஓவரையே நானே வீசுகிறேன். இதே போல இன்னும் புதிய விஷயங்களை கற்பேன். இதனால் தான் எனது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்துவிட்டேன். முன்பெல்லாம் எம்.எஸ்.தோனி இதே போன்று மிகவும் நிதானமாக விளையாடி அணி வீரர்களின் அழுத்தத்தை நீக்குவார். அந்த சமயத்தில் அவரை பார்த்து கற்றுக்கொண்டது தான் நான் இன்று செய்கிறேன்.
தோனியின் ஸ்டைல்
தோனி சென்ற பிறகு, அவரின் பொறுப்புகளை நான் ஏற்றுக்கொண்டேன். நான் மெதுவாக விளையாடுகிறேன் என்பதில் கவலையே கிடையாது. ஏனென்றால் நான் விரும்பிய முடிவுகள் எனக்கு கிடைத்துவிடுகிறது. இதனால் யார் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ள மாட்டேன் என பாண்ட்யா கூறியுள்ளார்.