மகளிர் கிரிக்கெட் மேம்பாடு
சர்வதே மகளிர் தினம் இன்று உலகெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 2023 முதல் மகளிர் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை
வரும் 2025 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடர்கள் மற்றும் வரும் 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச மகளிர் டி20 உலக கோப்பை தொடரும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்த தொடர்களில் மேலும் பல அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 சாம்பியன்ஷிப் கோப்பை
இதனிடையே வரும் 2027 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் புதிய தொடர், மகளிர் டி20 சாம்பியன்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட உள்ளதாக ஐசிசி தலைமை நிர்வாகி மனு சானே தெரிவித்துள்ளார். தெளிவான மற்றும் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வளர்ச்சி நடவடிக்கை
மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் கவனம் வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் ஒரு பகுதியாக கடந்த ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் 1.1 பில்லியன் வீடியோ பார்வைகள் மற்றும் மெல்போர்ன் இறுதிப்போட்டியில் 86,174 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தது உள்ளிட்டவை நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகமான ரசிகர்கள்
கடந்த ஆண்டில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பங்கேற்ற டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியை மைதானத்தில் 86,174 ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.