தொடங்கிய சர்ச்சை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு 4வது டி20 போட்டியில்தான் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சாஃப்ட் சிக்னல் மூலம் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
என்ன பிரச்னை
சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை டேவிட் மாலன் தரையோடு ஒட்டி பிடித்தார். மிகவும் க்ளோஸ் காலாக இருந்த சூழ்நிலையில் களத்தில் இருந்த நடுவர் சூர்யகுமாருக்கு அவுட் கொடுத்துவிட்டு பின்னர் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். வீடியோவில் சரியாக கணிக்க முடியாததால் கள நடுவரின் சாஃப்ட் சிக்னலே கடைசி முடிவு என 3வது நடுவர் தெரிவித்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். ஆனால் உண்மையில் பந்து தரையில் பட்டிருந்ததால் சர்ச்சை வெடித்தது.
எதிரொலி
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேச பேட்ஸ்மேன் தமீம் இக்பால், ஸ்ட்ரெயிட் ஷாட் அடிக்க, பவுலர் கெயில் ஜேமிசன் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் கீழே விழுந்தவுடன், அவரது கை தரையில் மோதியது. இதற்கு கள நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் கொடுத்துவிட்டு 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். ஆனால் சர்ச்சை எழாதவாறு 3வது நடுவர் அதற்கு நாட் அவுட் கொடுத்தார்.
அதிரடி முடிவு
இந்நிலையில் சாஃப்ட் சிக்னல் முறையில் திருத்தம் கொண்டுவர ஐசிசி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அதிகாரி ஜெய் ஷா, ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து பேசியதாகவும், அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தியா - நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு முன்னதாக சாஃப்ட் சிக்னல் முறையில் மாற்றம் கொண்டு வர ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கோலி காட்டம்
இதனிடையே இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, களநடுவர்களின் தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். சாஃப்ட் சிக்னல் விதியை எளிமையாக்க வேண்டும். மேலும் இதுபோன்ற தவறான முடிவுகளுக்கு தீர்வு காண வேண்டும். ஏனெனில் முக்கியமான போட்டிகளில் இது போன்ற முடிவுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.