ஆய்வு மையத்தில் அஜ்மல்
கடந்த மாதம், இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அஜ்மலின் பந்து வீச்சு முறை குறித்து போட்டி நடுவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பாக, அஜ்மல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலுள்ள பந்து வீச்சு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சஸ்பெண்ட்
அங்கு அவரது பந்து வீச்சு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி பந்து வீசும்போது அதிகபட்சமாக 15 டிகிரி அளவுக்குத்தான் கையை வளைக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அது விதிகளுக்கு முரணானது. ஆனால் அஜ்மல் பெரும்பாலும் 23.5 டிகிரி வரை கையை வளைத்து பந்து வீசுவது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அஜ்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குற்றச்சாட்டு
ஏற்கனவே 2009ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்து வீசியபோது, இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சோதித்து பார்த்ததில் பந்து வீச்சில் குறைபாடு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
அபார பந்து வீச்சாளர்
எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சையது அஜ்மல் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளையும், 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 178 விக்கெட்டுகளையும், 63 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு பின்னடைவு
அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ள நிலையில், அஜ்மலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாய்ப்பு உள்ளது
தனது பந்து வீச்சு முறையை மாற்றிக் கொண்டு மீண்டும் ஐசிசி சோதனைக்கு உட்பட்டால் மீண்டும் அஜ்மலுக்கு விளையாட அனுமதியளிப்பது குறித்து ஐசிசி முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.