உங்கள் கனவு நிறைவேறும்.. இந்திய அணிக்கே இந்த முறை உலகக் கோப்பை.. பாக். வீரர் டிவிட்.. சர்ச்சை!
லண்டன்: இந்திய அணிக்குத்தான் இந்த முறை உலகக் கோப்பை கிடைக்கும் என்று பாகிஸ்தான் வீரர் செய்த டிவிட் ஒன்று பெரிய வைரலாகி சர்ச்சையாகி உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் செமி பைனலுக்கு நுழைவதற்கு சந்தேகம் என்ற நிலையை அடைந்துள்ளது.
அதே சமயம் வங்கதேசம் செமி பைனலுக்கு நுழைவதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மிகவும் வலுவான அணியாக இருக்கிறது.

இந்தியா வெற்றி
இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து விளையாடிய போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது. மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியாதான் வென்றது.

இந்தியா எப்படி
இதில் முக்கியமாக பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது. இனி நிறைய இந்தியா எதிர்கொள்ள வேண்டிய அணிகளில் இங்கிலாந்து மட்டுமே வலுவான அணி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தியாவிற்கு செமி பைனலுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

என்ன சொன்னார்
இந்த நிலையில் கிரிக்கெட் இந்தியாவை சேர்ந்த மும்தாஜ் கான் என்ற கிரிக்கெட் ரசிகை ஒருவர், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறது. இந்திய அணியின் ஆட்டம் ஒரு இந்திய பிரஜையாக பெருமையாக இருக்கிறது. இதேபோல் தொடர் முழுக்க இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

என்ன பதில்
இதற்கு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி பதில் அளித்துள்ளார். அதில், உங்கள் எண்ணம் போலவே அனைத்தும் நடக்க வேண்டும்.. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இவரின் டிவிட் பெரிய வைரலாகியது. பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ஹசன் அலி அந்த டிவிட்டை டெலிட் செய்தார்.


Click it and Unblock the Notifications