இந்த உலக கோப்பையோடு நான் ரிட்டயர்டு ஆக போறேன்… அறிவிப்பு வெளியிட்ட அந்த கேப்டன்… அதிர்ந்த ரசிகர்கள்
டாக்கா:நடப்பு உலக கோப்பை தொடரே, நான் ஆட போகும் கடைசி உலக கோப்பை என்று வங்கதேச அணி கேப்டன் மோர்டாசா மனம் திறந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மே 30ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. அதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் தங்களது 15 பேர் கொண்ட குழுவை அறிவித்து விட்டன.
வங்கதேச அணி உலக கோப்பை தொடருக்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகிறது. அதற்காக, மே 1ம் தேதி அயர்லாந்து பயணிக்கிறது வங்கதேச அணி.

கடைசி உலக கோப்பை
அயர்லாந்து செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அணி கேப்டன் மோர்டாசா. அவர் கூறியதாவது: இதுவே என் கடைசி உலக கோப்பையாக இருக்கும். அதன் பிறகு நான் அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இருக்கிறேன் என்றார்.

கூடுதல் பளு
கடந்த முறை வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் மோர்டாசா வெற்றி பெற்றார். கூடுதல் பொறுப்புகள் காரணமாக கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தமுடிய வில்லை. அதன் தொடர்ச்சியாகவே உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெருமை
35 வயதான மூத்த வேகப்பந்துவீச்சாளர் மோர்டாசா, அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2001ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமான அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

காலிறுதியில் வங்கதேசம்
2014ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒரு தொடரை கூட தவற விடவில்லை. அதன் பிறகு இவருக்கு கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பில் வங்கதேச அணி 2015ம் ஆண்டு உலக கோப்பையில் முதன் முறையாக கால் இறுதிக்குள் நுழைந்தது.

முதன்முறையாக வீழ்த்தியது
அதன்பிறகு 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதி வரை முதல்முறையாக சென்றது. மேலும் இவரது கேப்டன் பொறுப்பில் தான் வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் இந்தியா, தென் ஆப்பரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை முதல்முறையாக வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications