சிறப்பான அணி
2003 உலகக் கோப்பை விளையாடிய இந்திய அணி அதுவரை இந்திய வரலாற்றில் விளையாடிய மிக சிறந்த அணிகளில் ஒன்று. இன்னொரு பக்கம் ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதை விட வலிமையான அணியாக இருந்தது. இந்த இரண்டு வலிமையான அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி பொறி பறக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால் என்ன
ஆனால் அந்த போட்டி முழுக்க ஆஸ்திரேலியா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 50 ஓவரில் 359 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. ரிக்கி பாண்டிங் மட்டும் தனி ஆளாக 140 ரன்களை குவித்தார். இவ்வளவு பெரிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி மோசமாக தோல்வி அடைந்தது. சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தீராத வடு
இந்த தோல்வியும் மஞ்சள் உடையுடன் ஆஸ்திரேலியா வீரர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுத்த அந்த தருணமும் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒன்று. ரிக்கி பாண்டிங் பேட்டில் ஸ்பிரிங் வைத்து இருந்தார் , ரீ மேட்ச் நடக்கும் என்பது தொடங்கி இந்த தொடர் முடிந்து பல வதந்திகள் வெளியானது. அந்த அளவிற்கு இந்த போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது.
மீண்டும் இதோ
ஆனால் இப்போது இந்திய அணி 16 வருடங்கள் கழித்து உலகின் சிறந்த அணியாக உருவெடுத்து உள்ளது. இதோ உலகக் கோப்பை புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் லீக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திவிட்டது. இதனால் கண்டிப்பாக இந்தியாதான் இந்த தொடரில் வலிமையான அணி என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
நல்ல வாய்ப்பு
செமி பைனலில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. ஒருவேளை செமி பைனலில் இந்தியா வென்று, இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா வென்றால் பைனலில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் 16 வருடங்கள் கழித்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பை பைனலில் மோத வேண்டிய நிலை ஏற்படும்.
செம மேட்ச்
ஒருவேளை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடினால் அது 2003 ஆண்டு போட்டியின் மறு பதிப்பாகவே இருக்கும். இரண்டு உச்ச அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டியை உலகமே உற்று நோக்கும் .. 2003ல் தோல்வி அடைந்த தீராத வடுக்களை சுமந்து நிற்கும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் அப்படி ஒரு போட்டி நடந்து அதில் இந்தியா வெற்றிபெற்றால் அது ஆகப்பெரும் ஆறுதலாக இருக்கும்.