ஈடன் கார்டனில் குவிந்த ரசிகர்கள்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்னெடுப்பில் நடந்து முடிந்துள்ள இந்தியாவின் முதல் பகலிரவு போட்டியில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆட்டம் நினைத்ததை விட சீக்கிரத்திலேயே முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சவுரவ் கங்குலி மகிழ்ச்சி
இந்த போட்டியில் ரசிகர்கள் கூட்டத்தை செல்பி எடுத்த சவுரவ் கங்குலி, இந்த கூட்டம் தனக்கு உலக கோப்பை இறுதி போட்டியை நினைவு படுத்துவதாக தெரிவித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய கூட்டத்தை காண முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மலரும் நினைவுகளில் கங்குலி
தொடர்ந்து பேசிய சவுரவ் கங்குலி, இந்த பகலிரவு போட்டி தனக்கு 2001ல் தான் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளை நினைவு படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். டெஸ்ட் போட்டி என்றால் அரங்கு நிறைந்த ரசிகர்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராகுல் டிராவிட்டுக்கு கங்குலி பதில்
ஈடன் கார்டன் போட்டியை கண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தான் பகலிரவு போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு சவுரவ் கங்குலி மகிழ்ச்சி தெரிவித்தார். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு போட்டி சிறந்து விளங்கும் என்றும் அவர் பதிலளித்தார்.
ரசிர்கள் கூட்டம் அள்ளும்
வங்கதேசத்துடன் இந்தியா மோதிய முதல் பகலிரவு போட்டியை காண ரசிகர்கள் அரங்கு நிறைந்து காணப்பட்டதை சுட்டிக் காட்டிய கங்குலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முன்னணி அணிகளுடன் இந்தியா பகலிரவு போட்டியை ஆடினால் மேலும் கூட்டம் அள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆலோசித்து செயல்படுத்தப்படும்
முன்னணி அணிகளுடன் இந்தியா பகலிரவு போட்டியில் விளையாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அது செயல்படுத்தப்படும் என்றும் கங்குலி தெரிவித்தார்.
கங்குலி புகழாரம்
பகலிரவு போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்த கங்குலி, கோலி ஒரு ரன் மெஷின் என்று புகழாரம் சூட்டினார்.