சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே ஆன டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே உள்ள நிலையில், இந்தியா இந்த தொடரை வெல்ல இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும்.
இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா, இது குறித்து தொலைக்காட்சியில் பேசும் போது, "இந்தியா இந்த தொடரை வெல்ல முடிந்தால், அது பெரிய அதிசயம்" என குறிப்பிட்டார்.
இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் தோற்றது. இது பலத்த விமர்சனத்தை எழுப்பியது. குறிப்பாக இரண்டாம் போட்டியில் ஏற்பட்ட இன்னிங்க்ஸ் தோல்வி பலரால் விமர்சிக்கப்பட்டது.
ஆனால், மூன்றாவது டெஸ்டில் இந்தியா மிகப்பெரிய அளவில் முன்னேறி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் விமர்சனங்கள் அப்படியே தலைகீழாக மாறி, இந்தியா அடுத்த இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1930இல் பிராட்மேன் தலைமையில் ஆஸ்திரேலியா ஒருமுறை 0-2 என தொடரில் பின்தங்கி இருந்து, இறுதியில் டெஸ்ட் தொடரை 3-2 என வென்றுள்ளார். அது போல நடப்பது பெரிய அதிசயம் என்கிறார் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில், நாம் இந்தியா மூன்றாவது போட்டியில் பெற்ற வெற்றியை மட்டும் பார்க்கிறோம். இங்கிலாந்து முதல் இரண்டு போட்டிகளில், குறிப்பாக இரண்டாவது போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இதுதான் உண்மை என தெரிவித்தார்.
ஆகாஷ் சோப்ரா சொல்வது தான் உண்மை. இங்கிலாந்து இரண்டில் ஒரே ஒரு போட்டியில் வென்றால் கூட போதும். தொடரை வென்று விடும், ஆனால், இந்தியா இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஒருவேளை, ஒரு போட்டி டிரா ஆனால் கூட, இந்தியா அடுத்த போட்டியை வென்றால் தான் குறைந்த பட்சம் தொடரை சமன் செய்ய முடியும். இந்தியா தொடரை வென்றால் அது பெரிய அதிசயம் தான்.