ஷுப்மன் கில்
இளம் வீரர் ஷுப்மன் கில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள வீரராக வலம் வந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பெற்று சில போட்டிகளில் ஆடினாலும் அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
2020இன் துவக்கத்தில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் ஷுப்மன் கில் இடம் பெற்று இருந்தார். அதற்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் இந்தியா ஏ அணி சார்பில் ஆடிய அவர் 5 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இருந்தார்.
அதிக ரன்கள்
அப்போது நியூசிலாந்து மண்ணில் 5 முதல்தர போட்டிகளில் அவர் 527 ரன்கள் குவித்து இருந்தார். அதில் விக்கெட் இழக்காமல் அடித்த 204 ரன்களும் அடக்கம். அந்த தொடரில் காயத்தால் விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதில் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல் தொடர்
அதன் பின் 2020 ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடினார். 14 போட்டிகளில் 440 ரன்கள் குவித்தார். அதன் சராசரி 33.84 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் அவர் அதிக ரன் குவித்தது கவனத்தை ஈர்த்தது.
பயிற்சிப் போட்டி
அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆவலாக இருந்தார். பயிற்சிப் போட்டியில் 0, 29, 43, 65 ரன்கள் குவித்தார். ஒரு முறை டக் அவுட் ஆகி இருந்தாலும் ப்ரித்வி ஷாவை விட அதிக ரன்கள் குவித்து இருந்தார்.
வாய்ப்பு மறுப்பு
எனினும், அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ப்ரித்வி ஷாவுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு முறையும் மிக அருகே வந்து பார்ம் அவுட்டில் இருக்கும் ப்ரித்வி ஷாவிடம் தன் இடத்தை பறிகொடுத்து இருக்கிறார்.
என்ன தான் செய்ய வேண்டும்?
டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என அவர் வேதனைப்படும் நிலைக்கு தள்ளி இருக்கிறார் கேப்டன் விராட் கோலி. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ப்ரித்வி ஷா சொதப்பிய நிலையில் அவரை ஏன் மீண்டும் நம்பி இருக்கிறார் கேப்டன் கோலி?