
அதிரடி வீரர் பண்ட்
அதிரடி வீரர் என்ற பெயரில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தோனி கிரிக்கெட்டில் தன் கடைசி காலத்தில் இருந்த நிலையில், 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றார்.

என்ன புகார்?
பல வாய்ப்புகளை பெற்றாலும் அவரால் தொடர்ந்து ரன் குவிக்க முடியும் என நிரூபிக்க முடியவில்லை. சில போட்டிகளில் ரன் குவிக்கும் அவர் பல போட்டிகளில் தவறான ஷாட் அடித்து ஆட்டமிழந்து வந்தார். அது தான் அவர் மீது பெரிய புகாராக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்
உலகக்கோப்பை தொடரில் மற்ற வீரர்களின் காயம் காரணமாக திடீர் வாய்ப்பு பெற்ற பண்ட், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றார். அந்த மூன்று தொடர்களிலும் சொற்ப ரன்கள் எடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்தார்.

தென்னாப்பிரிக்கா தொடர்
அடுத்து தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு முன் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பண்ட்டுக்கு சில வாய்ப்புகள் தான் கொடுப்போம். அவர் சரியாக ஆடாவிட்டால் அணியை விட்டு நீக்குவோம் என்கிற ரீதியில் பேசி இருந்தனர். அந்த தொடரிலும் தவறான ஷாட் அடித்து ஆட்டமிழக்கும் தவறை தொடர்ந்தார் ரிஷப் பண்ட்.

டெஸ்ட் அணியில் நீக்கம்
அதனால், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதில் விரிதிமான் சாஹா நீண்ட காலம் கழித்து அணியில் தன் வாய்ப்பை பெற்றார். அது ரிஷப் பண்ட்டுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

டி20 அணியில் வாய்ப்பு
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பண்ட் இடம் பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையல், தேர்வுக் குழு ரிஷப் பண்ட்டுக்கு டி20 அணியில் நீண்ட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி கூறியது. அதனால், வங்கதேச டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார்.

முதல் டி20
அந்த தொடரின் முதல் போட்டி ரிஷப் பண்ட்டின் சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது. பண்ட் அந்தப் போட்டியில் முதலில் நிதானமாக ஆடத் துவங்கி, கடைசி வரை அதிரடியே காட்டாமல் ஆடினார். 26 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இருந்தார்.

டிஆர்எஸ் சொதப்பல்
அந்த போட்டியில் விக்கெட் கீப்பராகவும் மோசமாக சொதப்பினார் பண்ட். இரண்டு எல்பிடபுள்யூ வாய்ப்புகளை கணித்து ரிவ்யூ கேட்குமாறு கூறாத அவர், ஒரு தவறான கேட்ச்சுக்கு ரிவ்யூ கேட்குமாறு கேப்டனிடம் கூறி ஏமாற்றம் அளித்தார்.

பொறுமையிழந்த ரசிகர்கள்
இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது பொறுமை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அதே போல ரசிகர்களும் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிக வாய்ப்பு உறுதி
சஞ்சு சாம்சன் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியில் இருந்தாலும், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அனைவரும் பண்ட் விஷயத்தில் பொறுமையின் எல்லையை கடந்து விட்டாலும், தேர்வுக் குழுவின் முடிவால் அவருக்கு தான் அடுத்த இரு டி20 போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications