முதல் டி20 தோல்வி
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 148 ரன்கள் குவித்தது. அது டெல்லி ஆடுகளத்தில் வெற்றி பெறக் கூடிய ஸ்கோர் என்றே கருதப்பட்டது.
சொதப்பல் ஆட்டம்
இந்தியா சொதப்பல் ஆட்டம்ஆனாலும், பந்து வீச்சு, பீல்டிங்கில் இந்தியா சொதப்பியதால் தோல்வி அடைந்தது. குறிப்பாக, க்ருனால் பண்டியா 18வது ஓவரில் நழுவ விட்ட கேட்ச் மற்றும் யாரும் கவனிக்காமல் போன இரண்டு டிஆர்எஸ் வாய்ப்புகள் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
முதல் வெற்றி
வங்கதேசம் அதற்கு முன்னதாக எட்டு டி20 போட்டிகளில் இந்திய அணியுடன் ஆடி, அந்த எட்டிலும் தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில், முதன்முறையாக அந்த அணி இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டி20யில் இந்திய அணிக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது டி20யில் தோற்றால்..
இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதுவரை இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு ஒருநாள் தொடரில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.
அவமானம் ஆகி விடும்
மேலும், இந்திய அணி சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது இல்லை. அதனால், இந்திய அணி இந்த டி20 தொடரை இழந்தால் அது சொந்த மண்ணில் அவமானமாக மாறி விடும்.
அணி மாற்றம்
வங்கதேசம் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் தான் இரண்டாவது போட்டியை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சில் கலீல் அஹ்மது நீக்கப்பட்டு ஷர்துல் தாக்குர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் தவறு
முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் செய்த தவறு, நிதானமாக ரன் குவிக்கத் துவங்கியது தான். துவக்க வீரர் தவான் மற்றும் மூன்றாம் வரிசயில் இறங்கிய ராகுல் முதலில் நிதானம் காட்டியதால், ரிஷப் பண்ட் தவிர அடுத்து வந்த வீரர்கள் அடித்து ஆட முற்பட்டு ஆட்டமிழந்தனர்.
கவலை அளிக்கும் வீரர்கள்
பேட்டிங்கில் நிதானமாக ஆடும் ராகுல், ரிஷப் பண்ட், தவான் ஆகியோர் கவலை அளிக்கும் வகையில் இருக்கின்றனர். அவர்கள் ரன் எடுத்தாலும் கூட பந்துகளை வீணடிப்பதால் அது அணிக்கு பெரிய அளவில் உதவாது.
கேப்டனுக்கு சுமை
முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து இருப்பதால் தொடரின் அடுத்த இரு போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் தலைமையில் இந்தியா இதுவரை டி20 தொடரில் தோல்வி அடைந்ததில்லை என்பதால், ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மழை வரலாம்
இரண்டாவது டி20 நடக்கும் ராஜ்கோட் மைதானம் இருக்கும் பகுதியில் மஹா புயல் காரணமாக மழை வரலாம் என கூறப்படுகிறது. அதையும் சேர்த்து இந்திய அணி சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.