
வங்கதேச டி20 தொடர்
இந்தியா - வங்கதேசம் அணிகள் டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. நவம்பர் 3 அன்று டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.

முக்கிய வீரர்கள் இல்லை
இந்த தொடரில் இரு அணிகளிலும் சில முக்கிய வீரர்கள் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார். வங்கதேச அணியின் முக்கிய பேட்ஸ்மேன் தமிம் இக்பால் தொடரில் இருந்தே தனிப்பட்ட காரணத்திற்காக விலகி இருக்கிறார்.

கேப்டனுக்கு தடை
வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஐசிசியால் சூதாட்ட முயற்சி விவகாரத்தில் தகவல் அளிக்கவில்லை எனக் கூறி இரண்டு ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா தான் கேப்டன்
விராட் கோலி இல்லாத நிலையில் துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் ஏற்கனவே இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

வலைப் பயிற்சி
டெல்லியில் கடும் காற்று மாசுபாட்டுக்கு இடையே இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தான் ரோஹித் சர்மா பந்துவீச்சில் தாக்கப்பட்டார்.

ரோஹித் சர்மா தாக்கப்பட்டார்
இலங்கையை சேர்ந்த த்ரோடவுன் பயிற்சியாளர் நுவான் சேனவிரத்னே பந்து வீசிய போது அது ரோஹித் சர்மாவின் மேல் வயிற்றுப் பகுதியில் கடுமையாக தாக்கியது. வலி பொறுக்க முடியாமல் பயிற்சியை நிறுத்தினார் ரோஹித்.

உடனே வெளியேறினார்
பின்னர், மைதானத்தை விட்டு பாதி பயிற்சியில் வெளியேறிய ரோஹித் சர்மா அதன் பின் மீண்டும் களத்துக்கு வரவில்லை. அதனால், காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த தகவலும் சில மணி நேரத்திற்கு வரவில்லை.

நீடித்த பரபரப்பு
விராட் கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் பரபரப்பு நீடித்தது.

இரவு வெளியான அறிவிப்பு
இந்த நிலையில், பிசிசிஐ நேற்று இரவு 9 மணி அளவில் ரோஹித் சர்மா காயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ரோஹித் சர்மா முதல் டி20யில் ஆடுவார் என கூறியதை அடுத்து நிம்மதி ஏற்பட்டது.

நிச்சயம் விளையாடுவார்
பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், ரோஹித் சர்மா இடது பக்க மேல் வயிற்றுப் பகுதியில் வலை பயிற்சியில் பேட்டிங் செய்த போது தாக்கப்பட்டார். பிசிசிஐ மருத்துவர் குழு அவரை பரிசோதனை செய்து அவர் உடற் தகுதியோடு இருப்பதை உறுதி செய்தது. அவர் காயத்தை பரிசோதித்து பார்த்த நிலையில், அவர் முதல் டி20யில் ஆட தயாராக இருக்கிறார் என கூறப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications