கோலி இல்லை
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு விலகினார்.
கேப்டன் ஆன ரோஹித் சர்மா
துணை கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்தார்.
காயம்
எனினும், அவர் பேட்டிங் செய்த போது கணுக்காலில் பலத்த காயம் அடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 60 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறி இருந்தார். அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தற்காலிக கேப்டன்
அதனால், தற்காலிக கேப்டனாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. விராட் கோலி மட்டுமில்லாமல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், யாரை கேப்டனாக நியமிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ராகுலுக்கு வாய்ப்பு
இந்தியா ஏ அணி மற்றும் மாநில அணிகளை வெற்றிகரமாக வழி நடத்திய அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே அணியில் இருந்தனர். எனினும், அவர்களை தாண்டி டி20 போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் கேஎல் ராகுலுக்கு தற்காலிக கேப்டன் பதவி அளிக்கப்பட்டது.
வியப்பை ஏற்படுத்தினார்
சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை முதல் ஓவரை வீசச் செய்து முதலிலேயே வியப்பை ஏற்படுத்தினார் ராகுல். இந்திய அணி 2.3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி முதலில் ஆதிக்கம் செலுத்தியது.சுந்தர், பும்ரா, சைனி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து அதிரடி
அடுத்து ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. 9வது ஓவர் வரை போட்டி இந்தியா வசம் தான் இருந்தது. 10வது ஓவரில் அவர்கள் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
ஒரே ஓவரில் 34 ரன்கள்
10வது ஓவரை சிவம் துபே வீசினார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர் அடித்து துவம்சம் செய்தனர். அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி. 164 ரன்கள் சேஸிங்கில், ஒரே ஓவரில் 34 ரன்கள் எடுக்கப்பட்டதால், போட்டி நியூசிலாந்து பக்கம் சாய்ந்தது.
பும்ராவை அழைத்த ராகுல்
இந்திய அணி வெல்ல வாய்ப்பே இல்லை என கருதப்பட்டது. அப்போது ராகுல் இரண்டு ஓவர்கள் கட்டுக் கோப்பாக வீசி இருந்த சாஹலை 11வது ஓவரை வீசச் செய்தார். 12வது ஓவரில் பும்ராவை அழைத்து வியப்பை ஏற்படுத்தினார் தற்காலிக கேப்டன் ராகுல்.
திருப்பம்
பும்ராவின் ஓவர்கள் கடைசி நேரத்தில் தேவைப்படும் என்றாலும், அந்த நேரத்தில் விக்கெட் வேண்டும் என்பதால் பும்ராவை பந்து வீசச் செய்தார். அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தினார். 13வது ஓவரில் சைனி பந்துவீச்சில் விக்கெட் கிடைக்க, இந்திய அணிக்கு திருப்பம் ஏற்பட்டது.
ரசிகர்கள் பாராட்டு
அதன் பிணம் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ராகுலின் சாமர்த்தியமான முடிவுகள் மற்றும் போட்டி கைமீறிச் சென்ற போது, அவர் நிதானமாக முடிவு எடுத்தது ஆகியவை பாராட்டைப் பெற்றது. கோலிக்கு அடுத்த கேப்டனாக இவர் வர அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் அவரை பாராட்டி வருகின்றனர்.