மூன்றாவது ஒருநாள் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா கடைசி 10 ஓவர்களில் மட்டும் 118 ரன்களை வாரி வழங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 315 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சவால் விட்டது.
சவால் இலக்கு
வெஸ்ட் இண்டீஸ் இத்தனை பெரிய இலக்கை எட்ட முக்கிய காரணம், இந்தியா பீல்டிங்கில் சொதப்பியது தான், ஜடேஜா கூட சில கடின கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார். ஆனால், ரிஷப் பண்ட் தான் படு மோசமாக செயல்பட்டார். கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ஸ்டம்பிங் வாய்ப்புகளை சொதப்பி ஏமாற்றம் அளித்தார்.
கடும் விமர்சனங்கள்
ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இருந்தே கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவரது பேட்டிங்கில் குறைபாடுகள் இருந்தது தான் அதற்கு முக்கிய காரணம்.
விக்கெட் கீப்பிங்கில் சொதப்பல்
ஆனால், தொடர்ந்து அவரது விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சொதப்பல்கள் அரங்கேறின. கேட்சகளை கோட்டை விடுவது ஒருபுறம் என்றால், தவறான டிஆர்எஸ் ரிவ்யூ கேட்க கேப்டனை தூண்டி விட்டு, இந்தியாவின் ரிவ்யூக்களை வீணாக்கி வந்தது மற்றொருபுறம் அணிக்கு சிக்கலாக அமைந்தது.
தொடர்ந்து வாய்ப்பு
எனினும், இளம் வீரர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தது இந்திய அணி நிர்வாகம். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் வரை அவர் மேல் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை.
சிறப்பான பேட்டிங்
எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார் பண்ட். சூழ்நிலை உணர்ந்து அதற்கேற்ப பேட்டிங் செய்தார் அவர்.
ரன் குவிப்பு
முதல் ஒருநாள் போட்டியில் 71 ரன்கள் குவித்த பண்ட், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் பேட்டிங் செய்ய களமிறங்கி 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்து மிரட்டினார்.
நழுவிய கேட்ச்கள்
இந்த நிலையில், பண்ட் மீதான விமர்சனங்கள் அடங்கி இருந்தன. ஆனால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் மூன்று எளிதான கேட்ச்களையும் இரண்டு கடினமான கேட்ச்களையும் நழுவவிட்டார். ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் சொதப்பி நழுவ விட்டார்.
ரசிகர்கள் கோபம்
இதையடுத்து இந்திய ரசிகர்கள் பலர் இணையத்தில் ரிஷப் பண்ட்டை நீக்க வேண்டும் என்றும், சஞ்சு சாம்சன் போன்ற வேறு விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.