தென்னாப்பிக்கா ஏ அணி
தென்னாப்பிரிக்க ஏ அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த பீட்டர் மாலன், டோனி களத்தில் நங்கூரம் போல் பாய்ந்து, ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை வீழ்த்த இந்திய வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய டோனி 117 ரன்கள் விளாசினார். பீட்டர் மாலன் 163 ரன்கள் குவித்தார்.
இமாலய இலக்கு
விக்கெட் கீப்பர் சீனிதெம்பா ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 509 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா ஏ அணி பந்துவீச்சாளர்கள் நவதீப் சைனி, அர்சான் நக்வஸ்வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலடி
இதனையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணி தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, பிரியங் பாஞ்சல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா வழக்கம் போல் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். பிரித்வி ஷா வெளியேறினாலும், கேப்டன் பிரியங் பாஞ்சல் 96 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.
அபிமன்யூ கலக்கல்
இதன் பின்னர் களத்திற்கு வந்த அபிமன்யூ ஈஸ்வரன் தனது ஆட்டத்தால் டிராவிட் உள்ளிட்ட வீரர்களை கண்ணுக்கு முன் நிறுத்தினார். ஒரு கட்டத்தில் அபிமன்யூ விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க ஏ அணி வீரர்கள் திணறினர். இருப்பினும் அபிமன்யூ 209 பந்துகளை எதிர்கொண்டு 103 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஹாரி 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இதன் மூலம் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் திணறி வரும் நிலையில் வாய்ப்புக்காக பாஞ்சல், ஈஸ்வரன் ஆகியோர் காத்துள்ளனர்.