கொல்கத்தா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாடும் முன்னணி அணிகள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன.
நேற்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 98 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 31 ரன்களும், தவான் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சுலைமான் பென்னும், ஜெரோம் டெய்லரும் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள். 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கெயிலும் , ஜார்லசும் களமிறங்கினார்கள். கெயில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பிராவோ 13 ரன்களும், ரசூல் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 19.2 ஓவரில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சமி, ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இந்திய அணி தனது அடுத்த பயிற்சி போட்டியில் இன்று தென் ஆப்பிரக்காவை எதிர்கொள்கிறது.