இரண்டாவது ஒருதினப் போட்டி.... இந்தியா சொதப்பல் பேட்டிங்..... இங்கிலாந்து அபார வெற்றி!
Recommended Video

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருதினப் போட்டியில் இந்திய அணி சொதப்பலாக பேட்டிங் செய்து தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி 86 ரன்களில் வென்றது. அதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில இந்தியா அபாரமாக வென்றது.
நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் ரோஹித் சர்மா அபார சதமடித்தார். கேப்டன் விராட் கோஹ்லி 75 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இரண்டாவது ஒருநாள் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய் 40, ஜானி பிரிஸ்டோ 38 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழக்க ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயான் மார்கன் களமிறங்கினர். இருவரும் நிதானமான ரன் சேகரிக்கத் துவங்கினர். மார்கன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சதமடித்தார் ரூட்
பென் ஸ்டோக்ஸ் 5, ஜோஸ் பட்லர் 4, மோயின் அலி 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து திணறியது. இருப்பினும் ஜோ ரூட் ஒரு பக்கம் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்து வந்தார். 239 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் களமிறங்கிய டேவிட் வில்லி அதிரடியாக விளையாடினார். 50 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 113 ரன்களுடன் கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.

3 விக்கெட் வீழ்த்தினார் குல்தீப்
முதல் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருடைய விக்கெட் உள்பட 3 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டயா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் இழந்தது
அடுத்து விளையாடிய இந்தியா, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து திணறியது. தவான் 36, ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். லோகேஷ் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

மோசமான பேட்டிங்
கோஹ்லி 45 ரன்கள், ரெய்னா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது களமிறங்கிய தோனியும், ஹார்திக் பாண்டயாவும் ரன்களை சேர்க்க முயன்றனர். 21 ரன்களுக்கு பாண்டயா ஆட்டமிழந்தார். தோனி 37 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. இதையடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. லியாம் பிளங்கெட் 4, டேவிட் வில்லி, ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.--


Click it and Unblock the Notifications