லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் இந்தியா 2-1 என தோல்வியடைந்தது. அத்துடன் நடு வரிசை பேட்டிங்கில் யாரை இறக்கலாம் என்பதற்கான குழப்பம் தொடர்வதும், நடு வரிசை பேட்டிங்கும் சொதப்பலாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்றது. நாட்டிங்காமில் நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருந்தன.
இந்த நிலையில் தொடரின் கடைசி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் விராட் கோஹ்லி 71, ஷிகார் தவான் 44, தோனி 42 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்தின் டேவிட் வில்லி, ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இங்கிலாந்து 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், கேப்டன் இயான் மோர்கன் ஆட்டமிழக்காமல் 88 ரன்களும் எடுத்தனர். துவக்க ஆட்டக்காரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் 27, ஜானி பிரிஸ்டோ 30 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார். அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில், 4வது வீரராக யாரை களமிறக்குவது என்பதில் தொடர்ந்து குழப்பம் உள்ளது. மேலும், நடுவரிசை வீரர்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.