இந்திய அணி
அதன்படி இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ரவி பிஷ்னாய், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
சீனியர்களின் கம்பேக்
இதே போல இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டிருந்த சில சீனியர்களும் கம்பேக் கொடுத்துள்ளனர். அதாவது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ப்ளேயிங் 11லும் வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
ஒதுக்கப்பட்ட தவான்
இந்நிலையில் நல்ல ஃபார்மில் உள்ள ஷிகர் தவானுக்கு மட்டும் வாய்ப்பு தரப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தவான், 14 போட்டிகளில் 38 சராசரியுடன் 460 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் 700 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ராகுல் டிராவிட் காரணம்
ஆனால் தவான் இல்லாததற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என தெரியவந்துள்ளது. இந்த முறை வீரர்களை தேர்வுக்குழு முடிவு செய்யவில்லை. ராகுல் டிராவிட் தான் தேர்வு செய்துள்ளார். அதிகப்படியான இளம் வீரர்களுக்கு தான் இனி வாய்ப்பு கொடுக்கப்போவதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதன் விளைவாக தான் தவான் நீக்கப்பட்டுள்ளார்.
தொலைப்பேசி பேச்சு
அணித்தேர்வு முடிந்த பிறகு தவானுடன் தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் பேசிய ராகுல் டிராவிட், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தான் அவரை நீக்கியதாகவும், மற்றபடி ஃபார்ம் இல்லை என்பது காரணமே கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். இதனால் தவானும் எந்த வித மனக்கசப்பும் இன்றி உள்ளதாக தெரிகிறது.