நாட்டிங்ஹம்: இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமான முறையில் ஆடிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 329 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 3௦7 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோஹ்லி 97, ரஹானே 81 ரன்கள் குவித்து, இந்தியா 300 ரன்கள் தாண்ட உதவினர்.
தொடக்க வீரர் தவான் 35 ரன்கள் எடுத்து சிறிது ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் தடுமாற்றத்தில் தான் இருக்கின்றனர். எனினும், முதல் இரண்டு போட்டிகளை ஒப்பிடும் போது, ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் இந்திய அணி ஓரளவு நன்றாகவே ஆடி ரன் குவித்தது.
இது குறித்து பேசிய இந்திய பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர், "வீரர்கள் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்திற்காக (அணியில் இடம்) ஆடுகிறார்கள். நாங்கள் அதை புரிந்து கொண்டு இருக்கிறோம்" என கூறி இருக்கிறார்.
மேலும், "இன்னும் ஐந்து இன்னிங்க்ஸ்கள் இருக்கின்றன. இந்திய வீரர்கள் இதே போல ஆடினால், அவர்களுடைய செயல்பாடுகள் முன்னேறும்" என கூறினார் பங்கர்.
முதல் போட்டியில், முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது தவான், ராகுல் கூட்டணி. இந்தியாவை பொறுத்தவரை ஆசியாவுக்கு வெளியே இது சிறப்பான தொடக்கம் தான். எனினும், ரஹானே, கோஹ்லி தவிர்த்து ஒருவரும் சிறப்பாக ஆடவில்லை. முதல் இன்னிங்க்ஸில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முந்தைய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இது பரவாயில்லை என்பது போல் தான் இருந்தது இந்திய வீரர்களின் பேட்டிங்.