கலக்கும் குல்தீப் யாதவ்
இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்திருக்கும் குல்தீப் யாதவ் தான் தற்போது ஸ்பின் உலகின் சூப்பர் ஸ்டார். நிலையாக இருந்த அஸ்வினின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என நினைத்த போது அந்த இடத்தில் அசால்ட்டாக ஸ்பின் தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார் குல்தீப். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சீரிசில் அறிமுகம் ஆனார் இவர். அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு ஒருநாள் போட்டியில் ஹாட் டிரிக் எடுத்தார். இந்திய அணியில் ஹாட் டிரிக் எடுத்த மூன்றாவது பவுலர் இவர்தான். இவர் நேற்று பத்திரியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தி சைனா மேன் குல்தீப் யாதவ்
அவர் தன்னுடைய செல்ல பெயருக்கான காரணத்தை கூறினார். இவரை கோஹ்லி தொடங்கி கமெண்டரி பாக்சில் இருக்கும் நபர்கள் வரை அனைவரும் 'சைனா மேன்' என்றுதான் அழைப்பார்கள். முதலில் இவர் பார்க்க சீனாவை சேர்ந்தவரை போல இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு தற்போது வேறு காரணம் கூறப்பட்டு இருக்கிறது. பொதுவாக இடதுகை லெக் ஸ்பின் போடும் நபர்கள் கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. அப்படி இடதுகை லெக் ஸ்பின் போடும் நபர்களை 'சைனா மேன்' என அழைப்பது வழக்கம். இந்திய அணியில் தற்போது இருக்கும் ஒரே சைனா மேன் குல்தீப் யாதவ் மட்டுமே.
13 வயதில் தற்கொலை
மேலும் இவர் தன்னுடைய தற்கொலை முயற்சி குறித்து பேசினார். அதில் ''எனக்கு அப்போது 13 வயது. பள்ளி அணி, அண்டர் 18 அணி அனைத்து விதமான அணியில் இருந்தும் நீக்கப்பட்டேன். நான் போடும் பந்துகள் அனைத்தும் வைட் பந்துகளாக சென்றது. இந்திய அணியில் விளையாட மாட்டேன் என தோன்றியது. கிரவுண்டில் இருந்து வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொள்ள சென்றேன். ஆனால் நல்ல வேளை அந்த தற்கொலை கைகூடவில்லை.'' என்ற சிரித்துக் கொண்டே கூறினார்.
ஆச்சர்யம் நடந்தது
மேலும் இந்திய அணியில் அவர் சேர்ந்தது குறித்து கூறும் போது ''அணியில் சேர்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தேன். கிரிக்கெட்டை விட்டே போய்விடலாமா என்று கூட நினைத்தேன். ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஷேன் வார்னேவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவர் வீடியோவை பார்த்துதான் எனக்கு என்று ஒரு ஸ்டைல் உருவாக்கினேன். அதுதான் என்னை அணியில் சேர்த்தது'' என்றார்.