காயமும், மாற்று வீரர்களும்
இந்திய அணியில் பாகிஸ்தான் போட்டியின் போது பண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. ஹாங்காங் போட்டியில் ஷர்துல் தாக்குர் காயமடைந்தார். இதில் அனைவருக்கும் உள்காயம் மற்றும் வலி போன்றவையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் இந்தியா திரும்பி உள்ளனர். இவர்களுக்கு பதில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பண்டியா இடம் யாருக்கு?
காயமடைந்த மூவரில் பண்டியா அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம் பெறும் திட்டத்தில் இருந்தவர். இப்போது அவர் இல்லாத நிலையில், அவரது ஆல் ரவுண்டர் இடத்தை யாரை வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீபக் சாஹர் நல்ல வேகப் பந்துவீச்சாளர். பேட்டிங்கில் பெரிய அளவில் இதுவரை அவர் சாதிக்கவில்லை. ஓரளவு தான் பேட்டிங்கில் செயல்படுவார். ஜடேஜா சுழல் பந்து வீசுவதோடு பேட்டிங்கிலும் தாக்குப் பிடித்து ஆடுவார். சித்தார்த் கவுல் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமே.
பேட்ஸ்மேன் பிரச்சனை
இந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தான் அவ்வப்போது சொதப்பி வருகிறார்கள். எனவே, இந்தியா 7 தேர்ந்த பேட்ஸ்மேன்களோடு களம் இறங்குவது அவசியம். ஐந்து வீச்சாளர்கள் தேவை என்ற நிலையில், 7 பேட்ஸ்மேன்களில் ஒருவராவது முழு நேர பந்து வீச்சாளராகவும் செயல்பட வேண்டும். இப்போது கேதார் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரை நம்பி 10 ஓவர்கள் கொடுக்க இந்தியா தயாராக இல்லை. எனவே, பண்டியா இடத்தை நிரப்ப ஜடேஜா அல்லது சாஹர் மட்டுமே இப்போது உள்ள வாய்ப்பு. இந்தியாவுக்கு தேவை வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா? அல்லது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரா? என்ற கேள்வியோடு நிற்கிறது இந்த குழப்பம்.
ஜடேஜாவுக்கு வாய்ப்பு?
இதில் ஜடேஜா அணியில் இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளது. காரணம், அவர் இடம் பிடித்தால் முழு நேர பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு பொருத்தமாக இருப்பார். அதே சமயம் ஏற்கனவே, சாஹல், குல்தீப் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதால், ஜடேஜா அணியில் இடம் பிடித்தால் அவர்களில் ஒருவர் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வேகப் பந்துவீச்சாளர்களில் கலீல் அஹ்மது மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற இடத்தை நிரப்புவார்.
வங்கதேசத்தை இந்தியா அவ்வளவு எளிதாக எண்ணி விடக் கூடாது. எனவே, இன்று இந்தியா தன் சிறந்த அணியோடு களமிறங்க வேண்டும்.