
துபாயில் இந்தியா பயிற்சி
இந்திய அணியின் ஆசிய கோப்பை தொடர் போட்டிகள் வரும் 18 முதல் தொடங்குகிறது. முதல் நாள் ஹாங்காங் அணியுடன் மோதும் இந்தியா, அடுத்த நாளே, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. எனவே பாகிஸ்தான் போட்டிக்கு போதிய இடைவெளி இல்லை. பாகிஸ்தான் போட்டிக்கு என தனி வலைப் பயிற்சிக்கும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து இந்திய அணி தீவிர வலைப் பயிற்சி செய்து இரண்டு போட்டிகளுக்கும் தயாராக வேண்டிய நிலையில் உள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கு வேலைப்பளு
ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கும் முன் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் இளம் வீரர்கள் ஷர்துல், கலீல் ஆகியோர் அதிக நேரம் பயிற்சியில் பந்து வீசினால், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஆடும் போது அயர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் வேலைப்பளுவை குறைக்க பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

யார் அந்த 5 பேர்?
இந்திய அணிக்கு பந்து வீச துபாய் வந்துள்ள ஐந்து வீரர்கள், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சித்தார்த் கவுல் ஆகிய 3 வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஷாபாஸ் நதீம் மற்றும் மாயன்க் மார்கண்டே ஆகிய இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள். இவர்களில் ஆவேஷ் தவிர்த்து மற்ற அனைவரும், இந்திய ஏ மற்றும் பி அணிகளில் சமீபத்தில் நடந்த முதல் தர போட்டிகளில் ஆடினார்கள்.

ஸ்பெஷல் ஐட்டம் கூட இருக்கு
அந்த ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி, "இது என்ன பிரமாதம், இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு" என வடிவேலு சொல்வது போல பாகிஸ்தானின் முஹம்மத் ஆமிர் பந்துவீச்சை சமாளிக்க இலங்கையில் இருந்து நுவான் செநேவிராத்னே என்ற சிறப்பு பந்துவீச்சாளரையும் வரவழைத்துள்ளனர். அவரும் பயிற்சியில் இந்திய அணிக்கு பந்துவீசுவார்.
என்ன பயிற்சி வேணா பண்ணுங்க... ஆனா, பாகிஸ்தான் போட்டியில ஜெயிச்சுடுங்க... இல்லனா இங்கிலாந்து தொடரோடு சேர்த்து வச்சு நெட்டிசன்ஸ் செஞ்சுடுவாங்க


Click it and Unblock the Notifications