For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்.. ஐபிஎல் ஹீரோ நடராஜன் வாழ்க்கை, இளைஞர்களுக்கு பாடம்

நடராஜன் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாகும். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர்.

By Veera Kumar

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன்தான் இப்போது டாக் ஆப் தி டவுன். அனைத்து ஊடகங்களும் இப்போது அவர் வசிக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்தை சுற்றி வருகின்றன. இத்தனைக்கும் காரணம், நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர், ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான்.

சர்வதேச கிரிக்கெட் ஆடாத உள்ளூர் ஆட்டக்காரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது நடராஜனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

பஞ்சாப் அணிக்காக ஆடப்போகிறார் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலியில் அவர் தனது திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம்.

டென்னிஸ் பந்து வீரர்

டென்னிஸ் பந்து வீரர்

டி.நடராஜன் என்று அறியப்படும் இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரின் முழுப்பெயர் தங்கராசு நடராஜன். வளர் இளமை காலங்களில், கிராம அளவில் டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். டென்னிஸ் பந்தை கொண்டே பேட்ஸ்மேன்களை அவர் திணறிடிக்கும் திறமை அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆசையை சுடர்விடச் செய்தது.

சென்னை கொடுத்த திருப்புமுனை

சென்னை கொடுத்த திருப்புமுனை

சொந்த ஊரிலேயே இருந்தால் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட நடராஜன், சென்னை வந்தடைந்தார். சென்னையில்தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும், கார்க் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இரண்டே ஆண்டுகள்தான். அதற்குள்ளாக நடராஜனின் திறமை காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக, சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

சோதனையை வென்று சாதனை

சோதனையை வென்று சாதனை

சோதனையான அந்த காலகட்டத்தில், பந்து வீச்சு ஸ்டைலை மாற்றி சிறப்பாக பந்து வீச நடராஜனுக்கு உதவியது, முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியம் ஆகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20யில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு ஐடியாக்கள் கொடுத்து மெருகேற்றினார்.

ஐபிஎல் ஹீரோ

ஐபிஎல் ஹீரோ

தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐபிஎல் 2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் ஆட உள்ளார். சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச வேண்டிய சூழ்நிலை அப்போது ஏற்படும், சர்வதேச தரம்வாய்ந்த பவுலர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும். இதன் மூலம், நடராஜனின் ஆட்டத் திறன் மேலும் மெருகேரும் என நம்பலாம்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அனேகமாக பஞ்சாப் அணி நடராஜனை இந்த சீசனிலேயே களமிறக்கும் என நம்பலாம்.

கோடிகளின் பூஜ்யம் தெரியாது

கோடிகளின் பூஜ்யம் தெரியாது

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், "நான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளது பற்றிதான் யோசித்துக்கொண்டுள்ளேன். கிடைத்துள்ள பணத்தை பற்றியல்ல. உண்மையை சொன்னால் 3 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம், எனது கிரிக்கெட் திறமை மேம்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

தினக்கூலி தொழிலாளி

தினக்கூலி தொழிலாளி

நடராஜன் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாகும். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் ஆடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

வாழ்த்தலாம் வாங்க

வாழ்த்தலாம் வாங்க

"எங்கள் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்ட வேண்டும். எனது சகோதர சகோதரிகள் இன்ஜினியரிங், சார்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம், இப்போது கிடைத்துள்ள பணம் உதவிகரமாக இருக்கும்" என்கிறார் நடராஜன். வாழ்க, வளர்க. நீங்களும் வாழ்த்தலாமே.

Story first published: Tuesday, February 21, 2017, 11:10 [IST]
Other articles published on Feb 21, 2017
English summary
From a base price of Rs 10 lakh, the 25-year-old Natarajan ended up as the highest paid Indian uncapped player in the auction when Kings XI Punjab snapped him up for Rs 3 crore after a bidding war.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+