விசாகப்பட்டினம் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடைபெற்ற பிளே-ஆஃப் சுற்றின் தகுதி நீக்கப் போட்டியில், ஹைதராபாத் பேட்ஸ்மேன் தீபக் ஹூடா ரன் அவுட் செய்யப்பட்டார். இவரது ரன்-அவுட்டில் சில குழப்பங்கள் நடந்தேறின.
ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி கடைசி ஓவரில் அதிக ரன்களை குவிக்க எண்ணி ஆடி வந்தது. இதனால், அந்த ஓவரில் விக்கெட்களும் விழுந்தது.
கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை கீமோ பால் வீசினார். தீபக் ஹூடா பந்தை சந்தித்தார். அந்த பந்து வைடாக சென்றது. இதை பயன்படுத்தி தான் பேட்டிங் வாய்ப்பு பெறலாம் என நினைத்த எதிர்முனை பேட்ஸ்மேன் ரஷித் கான், ஹூடாவை ஒரு ரன் ஓடுமாறு அழைத்தார்.
அதே சமயம், வைடு பந்தை பிடித்த டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பந்தை எதிர்முனை ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார். பந்து கீழே உருண்டு வந்தது. அதே சமயம், பேட்ஸ்மேன் ஹூடா ரன் ஓடும் முயற்சியில், பிட்ச் மீதே ஓடி வந்தார்.
டெல்லி கேப்டன் எனக்கு ஒரு உதவி பண்ணாரு.. பதிலுக்கு நான் ஒரு உதவி பண்ண வேணாமா? அடடே.. விஜய் ஷங்கர்!
பந்தை வீசி விட்டு நின்றிருந்த கீமோ பால், உருண்டு வந்த பந்தை பிடிக்க, கீழே குனிய.. அதே சமயம், ஹூடா அவருக்கு குறுக்கே ஓட முயற்சி செய்ய.. இருவரும் மோதிக் கொண்டு விழுந்தனர். மறுபுறம் பந்து நேராக ஸ்டம்ப்பை தகர்க்க, இது தெளிவாக ரன் அவுட் என தெரிந்தது.
எனினும், பந்துவீச்சாளர் குறுக்கே வந்ததால், ஹூடா ரன் ஓட முடியவில்லை என்ற பார்வையும் இதில் இருந்தது. அதனால், அம்பயர், "இந்த ரன் அவுட்டை நீங்கள் நிச்சயம் கேட்கிறீர்களா?" என டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டார். ஹைதராபாத் இன்னிங்க்ஸ் முடிய இரண்டு பந்துகளே இருந்த நிலையில், இதை கேட்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஆனால், ரிஷப் பண்ட் விடவில்லை. பேட்ஸ்மேன் செய்தது தான் தவறு என தன் நியாயத்தைக் கூறி கேப்டனை சமாதானம் செய்து, அவுட் கேட்க வைத்தார். வேறு வழியின்றி ஹூடா வெளியேறினார். ஹூடா பிட்ச் மீது ஓடி வந்ததும் தவறு என்பது குறிப்பிடத்தக்கது.