5,000 கோடி நஷ்டம்
கொரோனா வைரஸ் பரவும் முன்பே காப்பீடு செய்யாததால் தான் இவர்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக 5,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பரவிய பின் அது சார்ந்த நஷ்ட ஈடு அளிக்க முடியாத வகையில் தங்கள் காப்பீடுகளை மாற்றி அமைத்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.
பல கோடி லாபம்
ஐபிஎல் தொடர் வருடாவருடம் மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை நடைபெறும். பிரம்மாண்டமான இந்த தொடரில் பல ஆயிரம் கோடி வருமானம் கொட்டும். இந்த தோடரை நடத்தும் பிசிசிஐக்கு அதிக லாபம் கிடைக்கும். அது மட்டுமின்றி, ஐபிஎல் அணிகள், போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி, அத்துடன் ஐபிஎல் தொடரை வைத்து பல தொழில்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லாபம் அடையும். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் என்ன நடக்கும்?
நேரடி பாதிப்பு
பிசிசிஐ, ஐபிஎல் அணிகள், போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஆகியோர் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். இந்திய அரசுக்கும் வரி வருவாய் மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவை மூலம் நஷ்டம் ஏற்படும். ஐபிஎல் சீசனை குறி வைத்து லாபம் ஈட்டும் பல தொழில்களும் அந்த லாபத்தை இழக்கும்.
பிசிசிஐக்கு பாதிப்பு
அப்படி ஒரு சூழ்நிலை தான் 2020 ஐபிஎல் தொடருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. இதில் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பது பிசிசிஐ தான். ஐபிஎல் அணிகள் தான். இது போன்ற எதிர்பாராத நஷ்டத்தை ஈடுகட்ட பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் வருடா வருடம் காப்பீடு செய்து வருகிறார்கள்.
தாமதம் செய்த பிசிசிஐ
ஆனால், 2020 ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ காப்பீடு செய்யாமல் தாமதம் செய்துள்ளது. வழக்கமாக பிசிசிஐ இரண்டு வகையான காப்பீட்டை வருடா வருடம் எடுத்து வருகிறது. ஒன்று, தான் நடத்தும் சர்வதேச போட்டிகளுக்கு. மற்றொன்று, ஐபிஎல் போட்டிகளுக்கு.
கொரோனா வைரஸ் பரவியது
இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு காப்பீடு பெற்று விட்ட பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளுக்கு காப்பீடு செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் வெளியாகி விட்டன.
காலம் தாழ்த்திய பிசிசிஐ
அப்போதே பிசிசிஐ உஷார் ஆகி காப்பீடு விஷயத்தை கவனித்து இருக்க வேண்டும். ஆனால், காலம் தாழ்த்தி வந்தது. மார்ச் மாதம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கால் பதித்த நிலையில், காப்பீட்டு நிறுவனங்களை அணுகி உள்ளது பிசிசிஐ.
காப்பீட்டு நிறுவனங்கள் உஷார்
ஆனால், அதற்குள், காப்பீட்டு நிறுவனங்கள் கொரோனா வைரஸ்-க்கு நஷ்ட ஈடு வழங்கும் பகுதியை நீக்கி விட்டன. அதனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐக்கு நஷ்ட ஈடு கிடைக்காது. அது பெரும் நஷ்டத்தை அளிக்கும்.
ஐபிஎல் அணிகள் நிலை
அதே போல, பிப்ரவரி - மார்ச் கால கட்டத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளும் காப்பீட்டு நிறுவனங்களை அணுகி பெருந்தோற்று நோயால் ஐபிஎல் தடைபட்டால், அதற்கு காப்பீடு கிடைக்குமா? என காப்பீட்டு நிறுவனங்களை அணுகி உள்ளன.
பிசிசிஐக்கு பெரும் நஷ்டம்
பெரும்பாலும் யாரும் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்கவில்லை. அப்படியே காப்பீடு வழங்க ஒப்புக் கொண்ட சில நிறுவனங்கள் பெரும் தொகையை பிரீமியமாக செலுத்துமாறு கோரி உள்ளன. அதனால், எந்த ஐபிஎல் அணியும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காப்பீடு பெறவில்லை என தெரிகிறது. ஆனால், ஐபிஎல் அணிகளுக்கு குறைந்த அளவு நஷ்டம் தான் ஏற்படும். பிசிசிஐக்கு தான் பெரும் நஷ்டம். பிசிசிஐ காலம் தாழ்த்தாமல் முன்பே காப்பீடு பெற முயற்சித்து இருந்தால், அவர்கள் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை குறைத்துக் கொண்டிருக்க முடியும்.