மூன்று அனுபவ வீரர்கள்
மூன்று அனுபவ வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அது பெரும் சிக்கலாக மாறும். கடந்த சீசன்களில் கடைசி நேரத்தில் சில முக்கிய வீரர்கள் ஆட முடியாத நிலை ஏற்பட்ட போது இந்திய வீரர்களைக் கொண்டு சமாளித்தார் கேப்டன் தோனி. அதே நிலை மீண்டும் வந்துள்ளது.
நடைமுறை சிக்கல்கள்
2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கலுக்கு நடுவே நடைபெற உள்ளது. மார்ச் மாதத்தில் துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளது. அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
வெளிநாட்டில் ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. அதற்கு இந்திய அரசு அனுமதி வேண்டும். மறுபுறம், விமான சேவைகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.
பயிற்சி
ஐபிஎல் அணிகள் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு பயிற்சி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றன. எனினும், வீரர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் அது சாத்தியமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
வெளிநாட்டு வீரர்கள்
வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது தான் முக்கியம் என அனைத்து ஐபிஎல் அணிகளும் ஒரு மனதாக கருதுகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதிப்பதாக கூறி உள்ளன.
தடை
ஆனால், இதில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டினர் வெளிநாடுகளுக்கு செல்வதை அந்த நாடு தடை செய்துள்ளது.
தடை தொடர்ந்தால்
ஆகஸ்ட் இறுதி வரை இந்த தடை தொடரும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த தடை செப்டம்பர் வரை தொடர்ந்தால் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
10 தென்னாப்பிரிக்க வீரர்கள்
சுமார் 10 தென்னாப்பிரிக்க வீரர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவார்கள். அவர்களது ஒட்டுமொத்த ஐபிஎல் சம்பளம் 34.6 கோடி ஆகும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டும் தலா மூன்று பேர்.
முக்கிய வீரர்கள்
பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் மற்றும் கிறிஸ் மோரிஸ் இடம் பெற்றுள்ளனர், சிஎஸ்கே அணியில் பாப் டுபிளெசிஸ், இம்ரான் தாஹிர் மற்றும் லுங்கி நிகிடி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தோனி தான் காப்பாத்தணும்
சிஎஸ்கே அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தான். அதே போல அணியின் முடிவுகளை எடுப்பதில் முன்னாள் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பாப் டுபிளெசிஸ் பங்கு அதிகம். வேகப் பந்துவீச்சில் நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் லுங்கி நிகிடியின் சர்வதேச அனுபவம் முக்கியமானதாகும். தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம் பெறவில்லை என்றால் சிஎஸ்கே அணியை கேப்டன் தோனி தான் காப்பாற்ற வேண்டும் என இப்போதே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.