பவுலிங்
சென்னை அணியின் ஸ்பின் பவுலிங்கை ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் எல்லா எல்லைக்கும் பறக்க விட்டார். மொபைல் கேமில் 5ஐ அமுக்கி சிக்ஸ் அடிப்பது போல சுற்றி சுற்றி பந்துகளை பறக்கவிட்டார். அதிலும் அதிகம் நம்பப்பட்ட சாவ்லா, சாம் கரன், ஜடேஜா என்று எல்லோரின் பவுலிங்கிலும் சிக்ஸ் அடித்தார்.
மிக மோசம்
சென்னை அணியின் ஸ்பின் பவுலர்கள் மிக மோசமாக பவுலிங் செய்தனர். ஜடேஜா 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்தார். சாவ்லா மூன்று ஓவரிலேயே 50 ரன்கள் கொடுத்தார். அதேபோல் சாம் கரன் 2 ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார். இப்படி வரிசையாக ஸ்பின் பவுலர்கள் ரன்களை சிவாஜி படத்தில் ரஜினி பணத்தை தூக்கி வீசுவது போல வாரி வாரி கொடுத்தனர்.
என்ன நடந்தது
அதிலும் இந்த சஞ்சு சாம்சன் மட்டும் கராத்தே பழகி இருப்பார் போல. அவர் ஆட்டம் ஒரு மாதிரி இருந்தது. ''விட்டு பல ஏத்து ஏத்தினார்''. இவரை அவுட் செய்ய முடியாமல் சென்னை அணி கடுமையாக திணறியது. 32 பந்துகளை மட்டுமே பிடித்த இவர் 74 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்ஸ் அடக்கம்.
தோனி முடிவு
11 ஓவருக்கே 132 ரன்களை ராஜஸ்தான் எடுத்துவிட்டது. அப்போதுதான், இனியும் ஸ்பின் கொடுத்தால் சரியாக இருக்காது என்று 12வது ஓவரை லுங்கி நிகிடிக்கு தோனி கொடுத்தார். சென்ற போட்டியில் லுங்கி சரியாக பவுலிங் போடவில்லை. மும்பைக்கு எதிராக 4 ஓவர் போட்டு 38 ரன்கள் கொடுத்தார் . விக்கெட் எடுத்தாலும் அதிக ரன்களை இவர் கொடுத்தார் .
நம்ப முடியாது
இவர் எப்போது நன்றாக பவுலிங் போடுவார், எப்போது சொதப்புவார் என்றே தெரியாது. ஆனால் இவரை நம்பி , கடந்த போட்டியில் சொதப்பியதை எல்லாமே மறந்து தோனி இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். நினைத்தபடி 12வது ஓவரில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை லுங்கி எடுத்தார்.
டிவிஸ்ட்
சஞ்சு சாம்சன் அவுட்டான பின் வரிசையாக அடுத்தடுத்து ராஜஸ்தான் வீரர்கள் அவுட்டானார்கள். ஸ்பின் பவுலிங்கும் அதன்பின் வேலை செய்ய தொடங்கியது. சஞ்சு மட்டும் அவுட்டாகவில்லை என்றால் ராஜஸ்தான் 250 ரன்களை கூட எடுத்து இருக்கும். லுங்கிக்கு ஓவர் கொடுத்தன் மூலம் போட்டியின் போக்கை தோனி மாற்றி, ரன்கள் போவதை கட்டுப்படுத்தினார்.