சிக்கலுக்கு நடுவே ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அதற்கான தேதிகளை பெற பிசிசிஐ தலைவர் கங்குலி ஐசிசியுடன் முட்டி மோதினார். அதில் முன்னாள் ஐசிசி தலைவர் ஷஷான்க் மனோகர் கடுப்பாகி ஐபிஎல் நடத்த விடாமல் டி20 உலகக்கோப்பையை வைத்து முட்டுக் கட்டை போட்டார்.
கங்குலியின் பங்கு
மிகக் குறுகிய காலத்தில் தான் ஐபிஎல் தேதிகளை உறுதி செய்தது பிசிசிஐ. ஒன்றரை மாத இடைவெளியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தொடர் தடைபடாத அளவுக்கு திட்டமிட்டு தொடரை நடத்தி முடித்துள்ளது பிசிசிஐ. இதற்கு அனைவரும் எந்த பிரச்சனையும் செய்யாமல் ஒத்துழைப்பு அளித்ததில் கங்குலியின் பங்கு அதிகம்.
அமைதி காத்த ஐபிஎல் அணிகள்
இடையே சிஎஸ்கே அணியின் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, ஸ்பான்சர்கள் விலகினார்கள். அப்போதெல்லம் ஐபிஎல் அணிகள் இடையே லேசான புகைச்சல் இருந்தாலும் அவர்களை அமைதி காக்க வைத்தார் கங்குலி.
கங்குலி முக்கிய காரணம்
ஐபிஎல் நிர்வாகக் குழு, அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், செயலாளர் ஜெய் ஷா என அனைவரும் ஐபிஎல் நடக்க முக்கிய காரணம் தான். ஆனால், அவர்களை விட முக்கியமானவர் கங்குலி தான். வெளிநாட்டு வீரர்களின் ஒப்புதலில் இருந்து, அணிகள், ஐசிசியின் ஒப்புதல் பெறுவது வரை பலரையும் தனி ஆளாக சமாளித்தார்.
நன்றி சொன்ன ரவி சாஸ்திரி
இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை நடத்த உதவியதற்கு நன்றி கூறி ட்வீட் போட்டுள்ளார். அதில் ஜெய் ஷா, பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் நிர்வாகக் குழு ஆகியோரை குறிப்பிட்டுள்ள அவர், கங்குலி பெயரை குறிப்பிடவில்லை.
கங்குலி எங்கே?
இதைக் கண்ட ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். சிலர் மீம் போட்டு கங்குலி இதைக் கண்டு கோபத்தில் இருப்பதாக கூறி உள்ளனர். சிலர் ரவி சாஸ்திரி வேண்டும் என்றே கங்குலி பெயரை கூறவில்லை என அவர்களது பழைய பகையை சுட்டிக் காட்டி உள்ளனர்.
பழைய பகை என்ன?
2016ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டது. அதில் சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன் உறுப்பினர்களாக இடம் பெற்று இருந்தனர். அப்போது ரவி சாஸ்திரிக்கு பதில் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக தேர்வு செய்தார் கங்குலி.
மோதல் போக்கு
அப்போது ரவி சாஸ்திரி கங்குலியை கடுமையாக திட்டி பேட்டி கொடுத்தார். அப்போது முதல் இருவருக்கும் இடையே சுமூகமான நட்பு இல்லை. இந்த நிலையில், கங்குலி 2019இல் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையிலும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் ரவி சாஸ்திரி.
ஷேன் வார்னே சொன்ன நன்றி
சில ரசிகர்கள் ஷேன் வார்னே ஐபிஎல் நடத்தியதற்கு நன்றி கூறி உள்ள பதிவை சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவர் பிசிசிஐ மற்றும் கங்குலி பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி உள்ளார். அவருக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது தெரிந்துள்ளது என ரவி சாஸ்திரியை விமர்சனம் செய்துள்ளனர் ரசிகர்கள்.
வீட்டுக்கு கிளம்புங்க
சிலர் ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல வேண்டிய காலம் வந்து விட்டது என்பதையே அவரது நன்றி பதிவு காட்டுவதாக கூறி உள்ளனர். ரவி சாஸ்திரி இதற்கு விளக்கம் அளிப்பாரா?