கேள்விக்குறியான பயிற்சி முகாம்
சிஎஸ்கே வீரர்கள் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் 11 சிஎஸ்கே பணியாளர்களுக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அந்த அணி மோதவிருந்த முதல் போட்டி போன்றவை கேள்விக்குறியாகியுள்ளன.
நாளை மறுதினம் பயிற்சி முகாம்
இந்நிலையில் நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்த அணியின் சிஇஓ, அணி வீரர்கள் நாளை மறுதினம் முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அணி வீரர்களுக்கு நாளை மேலும் ஒரு டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது.
விரைவில் களத்தில் சந்திக்கிறேன்
இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் தான் சிறப்பான வகையில் தேறி வருவதாகவும் விரைவில் களத்தில் சந்திப்போம் என்றும் சிஎஸ்கே பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் ஹோட்டல் அறையில் பிட்னஸ் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பயிற்சி முகாமில் பங்கேற்பு
தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடர்ந்து 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அதையடுத்து அவர்களுக்கு இரண்டு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அதில் அவர்களுக்கு நெகட்டிவ் வரும் பட்சத்தில் அவர்கள் சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் ஈடுபட்டு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.