நல்லா போடு மச்சி.. ஐபிஎல் தொடரில் தமிழால் இணைந்த பிற மாநில வீரர்கள்.. நேற்று நடந்த சுவாரசிய சம்பவம்!
துபாய்: நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் தொடர் சென்று கொண்டு இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் பிளே ஆப் செல்வதற்கான மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்
இந்த தொடரில் தமிழக வீரர்கள் பலர் கலக்கி வருகிறார்கள். வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் என்று இளம் தமிழக வீரர்கள், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் கலக்கி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றாக ஆடும் நேரங்களில் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம்.

தமிழில் பேசினார்கள்
அதிலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சக வீரர் வருண் சக்கரவர்தியுடன் தமிழில் பேசுவது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தை சேராத இரண்டு வீரர்கள் தமிழில் பேசினார்கள். ஆம் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், கர்நாடகாவை சேர்ந்த ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் நேற்று களத்தில் தமிழில் பேசிக்கொண்டனர்.

என்ன நடந்தது
இவர்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் கோபால் பவுலிங் செய்த போது கீப்பிங் செய்து கொண்டு இருந்த சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார். நீ இப்படி போடு மச்சி.. பந்தை உள்ளே போடு என்று சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார்.

நல்லா போடு
நல்ல டைம் எடுத்து போடு என்று தொடர்ந்து சஞ்சு சாம்சன் கோபாலுக்கு தமிழில் அறிவுரை வழங்கினார். இரண்டு பேருமே வேறு வேறு மாநிலம் என்றாலும் இருவருக்கும் இணைப்பு மொழியாக தமிழ் இருக்கிறது. இரண்டு பேருமே போட்டி முழுக்க நேற்று தமிழில் பேசிக்கொண்டனர்.

வைரல்
இவர்கள் இப்படி தமிழில் பேசிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. நேற்று தென்னிந்திய மாநிலங்கள் பிரிந்த தினத்தில் இப்படி ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.. அதிலும் தமிழ்நாடு தினத்தில் இப்படி ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது .


Click it and Unblock the Notifications