அவங்களுக்காக வெயிட் பண்ணவெல்லாம் முடியாது.. கங்குலி மாஸ்டர்பிளான்.. வெளியே கசிந்த ஐபிஎல் தேதிகள்!!
மும்பை : 2020 ஐபிஎல் தொடரை நடத்த எந்த தடை வந்தாலும் அதைத் தாண்டி தொடரை நடத்த களத்தில் குதித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
2020 ஐபிஎல் தொடரை அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் தேதிகளை கூட அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

2020 ஐபிஎல் நடத்த திட்டம்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அந்த வைரஸ் தாக்கம் குறையாத நிலையிலும் உலகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.

டி20 உலகக்கோப்பை சிக்கல்
2௦20 டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா வைரஸுக்கு மத்தியில் அந்த தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என் கூறப்படுகிறது. அந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ விரும்புகிறது. ஆனால், டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் முடிவை ஐசிசி இதுவரை அறிவிக்கவில்லை.

கங்குலி அதிரடி முடிவு
சிலர் ஐசிசி, ஐபிஎல் தொடரை தடுக்கவே டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என கூறி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி எப்படியும் ஐபிஎல் நடத்த உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கங்குலி கடிதம்
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முன்பே கிட்டத்தட்ட அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த அவர் முடிவு செய்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் ஐபிஎல் நடக்கும் என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தேதிகள்
இதற்கிடையே ஐபிஎல் நடக்க உள்ள உத்தேச தேதிகளை கூட அவர் முடிவு செய்து விட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த உத்தேச தேதிகள் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்றாலும், அடுத்தகட்ட திட்டங்கள் இந்த தேதிகளை வைத்தே நடக்க உள்ளது.

தொடர்கள் ரத்து
அதன் ஒரு பகுதியாகவே, ஜூன் மற்றும் ஆகஸ்டில் நடக்க இருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தள்ளி வைக்கும் அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது என்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

தொலைக்காட்சியுடன் பேச்சு
இதில் குறிப்பாக, ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப உள்ள தொலைக்காட்சியுடன், பிசிசிஐ பேசி தேதிகள் குறித்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. முன்கூட்டியே தேதிகளை முடிவு செய்தால் தான் விளம்பரதாரர்களை ஈர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தாலும் ஐபிஎல் நடக்கும்
ஐசிசி என்ன செய்தாலும், ஐபிஎல் தொடருக்கு எதிராக என்ன சிக்கல் வந்தாலும் சிறிய அளவிலாவது ஐபிஎல் தொடரை நடத்தி விட பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications