மீண்டும் ஐபிஎல் ஏற்பாடு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிநாட்டில் ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த அழைப்பு விடுத்து இருந்த நிலையில், அதை ஏற்றுக் கொண்டது பிசிசிஐ.
பாதிப்பு குறைவு
2014இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஐபிஎல் போட்டிகள் நடந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நாட்டில் மிகவும் குறைவான அளவில் உள்ளது. எனினும், பிசிசிஐ முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.
அனுமதி கிடைக்காது
ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்யும் என கூறி இருந்தார் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல். எனினும், பிசிசிஐ வட்டாரத்தில் வீரர்களின் பாதுகாப்பை கருதி ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்காது என கூறப்பட்டது.
30 முதல் 50 சதவிகித ரசிகர்கள்
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி மைதானத்தில் 30 முதல் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க அவர்கள் நாட்டு அரசிடம் அனுமதி கோரப்போவதாக கூறி உள்ளார்.
பார்வையாளர்களுக்கு அனுமதி
இது குறித்து அவர் கூறுகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 6000 பேருக்கு சற்று அதிகமாக மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அங்கே அனைத்து நிகழ்வுகளுக்கும் 30 முதல் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ளதாகவும் கூறினார்.
இந்திய அரசின் அனுமதி
அதனால், இந்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிசிசிஐயின் ஒப்புதலுடன், தங்கள் நாட்டு அரசின் அனுமதி பெற்று ஐபிஎல் போட்டிகளுக்கு 30 முதல் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக உஸ்மானி தெரிவித்தார்.
அபாயம்
ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதித்தால் ஐபிஎல் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை உள்ளே அனுமதிக்க அனைத்து வீரர்களும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகமும் உள்ளது.