ஆர்சிபியின் கோப்பை கனவு
கடந்த 2008ம் ஆண்டு முதலே ஐபிஎல்-ல் இருக்கும் ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான் வழிநடத்தியும் சொதப்பல் தான் மிஞ்சியது. கடந்த 2013ம் ஆண்டு முதல் விராட் கோலி கடுமையாக போராடி ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி நாயகர்கள் உதவிய போதும், எதுவும் நடக்கவில்லை.
டூப்ளசிஸின் கேப்டன்சி
ஆனால் இந்த முறை டூப்ளசிஸின் கேப்டன்சியில் ஆர்சிபி அசால்டாக வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் துறை சம பலத்துடன் செயல்பட்டு வருகிறது. இதே போல ஃபீல்டிங்கும் இந்த முறை தரமான ஒன்றாக உள்ளது. விராட் கோலி செய்ததையே தானே டூப்ளசிஸ் செய்கிறார். ஆனால் தற்போது மட்டும் ஆர்சிபி எப்படி சாதிக்கிறது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சேவாக் பதில்
இந்நிலையில் இதற்கு விரேந்தர் சேவாக் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதிய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மற்றும் புது கேப்டன் டூப்பிளஸிஸ் கூட்டணி, ஆர்சிபி அணியின் பழைய திட்டங்களை மொத்தமாக மாற்றியுள்ளனர். ஒரு வீரர் 2-3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட தவறினால், அவரை உடனடியாக ப்ளேயிங் 11ல் இருந்து விராட் கோலி நீக்கிவிடுவார். இதனால் ஆர்சிபியின் ப்ளேயிங் 11ல் எப்போதுமே ஒரு நிலையான தன்மை இருந்ததில்லை. ஆனால் டூப்ளசிஸ் நிலையான ப்ளேயிங் 11ஐ அணியை செயல்படுத்தி வருகிறார்.
அதிர்ஷ்டமும் தேவை
இதே போல அதிர்ஷ்டமும் ஓரளவிற்கு கைக்கொடுத்து வருகிறது. கடந்த காலங்களில் 200+ ரன்கள் குவித்தால் துரதிஷ்டவசமாக தோற்றுவிடும். ஆனால் இந்த முறையோ, பிளே ஆஃப் செல்ல டெல்லியை, மும்பை அணி தோற்கடித்து உதவியது. பல வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர், விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டார். இது ஆர்சிபிக்கு பெரும் பலமாக அமைந்துவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.