மெல்போர்ன்: மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான மும்பை அணியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், டி20 அணி கேப்டனுமான ஆரோன் பின்ச் இடம் பிடித்திருந்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர் சோபிக்கவில்லை. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய இவர், மொத்தமே 23 ரன்கள்தான் எடுத்தார். முதல் போட்டியில் 5, அடுத்த போட்டியில் 8 மற்றும் மூன்றாவது போட்டியில் 10* ரன்கள் எடுத்திருந்தார்.
அகமதாபாத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கின் போது இவரது இடது கால் தொடையின் பின்பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால் இவர், 'பீல்டிங்' செய்யவரவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்ற இவருக்கு 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் காயத்தின் பாதிப்பு பெரிய அளவில் இருந்ததால் உடனடியாக 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. தவிர இவர் 12 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், 8வது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகியுள்ளார்.