2020 ஐபிஎல் ஏலம்
2020 ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒன்பது வீரர்களை வாங்கியது. அனில் கும்ப்ளே ஏலம் நடைபெற்ற இடத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்து வாங்கினார்.
இரண்டு வீரர்கள்
அந்த அணி இரண்டு வீரர்களை பெரிய தொகைக்கு வாங்கியது. அதில் ஒருவர் தான் ஷெல்டன் காட்ரல் தான். மற்றொருவர் கிளென் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்-ஐ 10.75 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி.
பஞ்சாப் வாங்கிய வீரர்கள்
இந்த ஏலத்தில் பஞ்சாப் அணி வாங்கிய வீரர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (ரூ.10.75 கோடி), ஷெல்டன் காட்ரெல் (ரூ.8.5 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.2 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.55 லட்சம்), தீபக் ஹூடா (ரூ.50 லட்சம்), ஜேம்ஸ் நீஷம் (ரூ.50 லட்சம்), இஷான் பொரல் (ரூ.20 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ.75 லட்சம்), தாஜிந்தர் தில்லான் (ரூ.20 லட்சம்)
காட்ரல்லை வாங்கியது சரியா?
இவர்களில் காட்ரல்-ஐ 8.5 கோடிக்கு வாங்கியதை சிலர் வரவேற்றாலும் சிலர் அது அதிகப்படியான செலவு என விமர்சித்தனர். அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
கம்பீர் விமர்சனம்
அனில் கும்ப்ளேவுக்கு வேறு வழியில்லாமல் தான் காட்ரல்-ஐ வாங்கி இருக்கிறார். அவருக்கு அத்தனை பெரிய தொகை கொடுத்தது அதிகம். அவர் 8.5 கோடி அளவுக்கான தரமான பந்துவீச்சாளர் இல்லை என விமர்சித்துக் கூறினார் கம்பீர்.
|
பாட் கம்மின்ஸ்-ஐ வாங்க முயற்சி
அனில் கும்ப்ளே ஏலத்தில் பாட் கம்மின்ஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரை வாங்க கடுமையாக முயன்றார். எனினும், அவர்கள் விலை மிக அதிகமாக சென்றதை அடுத்து பின் வாங்கினார். அதையும் குறிப்பிட்டு பேசி இருக்கிறார் கம்பீர்.
இதுதான் காரணம்
கம்பீர் கூறுகையில், "வேறு சிறந்த தேர்வுகள் எதுவும் இல்லை. கம்மின்ஸ், கிறிஸ் மோரிஸ் இருவரும் விற்கப்பட்டனர். அவர்கள் மோரிஸ்-ஐ வாங்க கடுமையாக முயன்றார்கள். ஆனால், கிடைக்கவில்லை" என்றார்.
வேலைக்கு ஆகாது
மேலும், "நான் இப்போதும் ஷெல்டன் காட்ரல் 8.5 கோடி அளவுக்கு தரமான பந்துவீச்சாளர் என நினைக்கவில்லை. அவர் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினாலும், அவர் இன்னும் துல்லியம் மற்றும் வேகத்தில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரது கட்டர் வகை பந்துவீச்சு மொஹாலியில் (பஞ்சாப் அணியின் சொந்த மைதானம்) வேலைக்கு ஆகாது" என்றார் கம்பீர்.
கும்ப்ளே மீது விமர்சனம்
"அனில் கும்ப்ளே கம்மின்ஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ்-ஐ வாங்க முடியாத காரணத்தால் வேறு வழியின்றி காட்ரல்-ஐ வாங்கி இருக்கிறார் என நினைக்கிறேன். தேவை அதிகமாக இருந்து, பொருள் குறைவாக இருந்தால், இது போன்ற விஷயங்கள் நடைபெறும்" என கும்ப்ளே முடிவை விமர்சித்தார் கம்பீர்.