டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களின் வேலைப்பளு எவ்வளவு உள்ளது என்பதை பிசிசிஐ கண்காணித்து வருகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன.
இந்த சீசன் துவங்கி 10 நாட்களில், இதுவரை 14 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்தப் போட்டிகளுக்காக, வீரர்கள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த 8 அணிகளில் விளையாடும் குறிப்பிட்ட 23 வீரர்களை, பிசிசிஐ கண்காணித்து வருகின்றது.
அதாவது, இந்த அணிகளில் உள்ள, இந்திய அணிக்காக இதுவரை விளையாடாத இளம் வீரர்களின் ஆட்டம் எவ்வாறு உள்ளது என்பது கண்காணிக்கப்படுகிறது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிருத்வி ஷா, மயாங்க் அகர்வால் என, பல இளம் வீரர்களும், ரஞ்சியில் கலக்கியவர்களையும் ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்துள்ளன.
ஆனால், இவற்றில் பெரும்பாலானோருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், போட்டிகளுக்கு முன்பு நடக்கும் பயிற்சியின்போது, சீனியர் வீரர்களுக்கு, இவர்கள் பந்து வீசுகின்றனர், பேட்டிங் செய்கின்றனர். இதுபோன்று பயிற்சியின்போது, அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி உள்ளன, அதிக வேலை பளு கொடுக்கப்படுகிறதா என்பதை பிசிசிஐ கண்காணிக்கிறது.
அதாவது தற்போது 19 வயதுக்குட்பட்டோர் அணியில் உள்ள வீரர்கள், கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர்கள் மற்றும் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடியவர்கள் என, இளம் வீரர்களை மூன்றாக பிரித்து அவர்களை தேவைப்படும்போது, தேசிய அணிக்கு பயன்படுத்த இந்த கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
ஐபிஎல் அணிகளின் உடற்தகுதி நிபுணர்களுக்கும், இதுபோன்ற வீரர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி, பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி தற்போது 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய பிருத்வ் ஷா. ஷப்னம் கில், ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோடி, முன்னாள் வீரர்களான இஷான் கிஷண், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ரஞ்சி போன்ற உள்நாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனகட் உள்பட 23 வீரர்கள், பிசிசிஐயின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.