வரலாறு படைத்த வங்கதேசம்.. உலகக்கோப்பைக்கு முன் கெத்து காட்டி.. முத்தரப்பு தொடரில் வெற்றி!
டுப்ளின் : அயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேச அணி.
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதிய இந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் ஹோப், ஆம்ப்ரிஸ் விக்கெட் இழக்காமல் 20.1 ஓவர்களில் 125 ரன்கள் சேர்த்து இருந்த போது, மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி பல மணி நேரம் தடைப்பட்டது.
பின்னர், 24 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது. டக்வோர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வங்கதேச அணியின் சௌம்யா சர்க்கார் 66 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் முஷ்பிகுர் ரஹீம் 36 ரன்கள் சேர்க்க, பின் வரிசை பேட்ஸ்மேன் ஹுசைன் 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார். 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கைஎட்டியது வங்கதேசம்.
முதன்முறையாக பலநாடுகள் பங்கேற்ற ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி வாகை சூடி கோப்பை கைப்பற்றி உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பு வந்தேசம் பெற்றுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி, உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட அந்த அணிக்கு பெரிய உந்துசக்தியாக அமையும்.


Click it and Unblock the Notifications