இந்த ரன்னை கூட எங்களால அடிக்க முடியலையே.. கண் கலங்கிய அயர்லாந்து மகளிர் அணி கேப்டன்
கயானா : உலக மகளிர் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது அயர்லாந்து அணி.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 139 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.
இதனால், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அயர்லாந்து அணியின் கேப்டன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசி கண்கலங்கினார்.

இந்தியாவின் வெற்றிகள்
உலக மகளிர் டி20 தொடரின் குரூப் "பி" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் இந்தியா தன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது.

பாகிஸ்தான் கேப்டன் ரன் குவிப்பு
அடுத்ததாக அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து டி20 போட்டியில் தங்கள் அணியின் அதிகபட்ச ரன்களான 139 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஜவேரியா கான் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

சொற்ப ரன்கள் அடித்த அயர்லாந்து
அடுத்து பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணி 101 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் இரண்டு பேர் தவிர மற்றவர்கள் யாரும் 10 ரன்களை கூட தாண்டவில்லை.

நா தழுதழுக்க பேசிய கேப்டன்
போட்டி முடிந்த உடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அயர்லாந்து அணியின் கேப்டன் லாரா, "நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்றால், அங்கே என்ன ஸ்கோர் அடித்தார்கள் என நாங்கள் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம் என தெரியவில்லை" என்றார். தங்கள் அணியால் டி20 போட்டியில் 140 ரன்களை கூட அடிக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாத லாரா நா தழுதழுக்க, கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க இதை பேசி முடித்தார். அயர்லாந்து அணி முதல் இரண்டு குரூப் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்து இந்தியாவை சந்திக்கிறது.


Click it and Unblock the Notifications